மந்திரம் - வைரமுத்து
நன்றி :: விகடன் - கருவாச்சி காவியம் 24

ஊர்ப்பட்ட மருந்து குடுத்துப் பாத்தா வைத்தியச்சி; ஒண்ணும் ஆகல.
‘‘இருளடிச்சிருக்கு; பிள்ள பயந்துபோயிருக்கு. இனிமே மருந்து மாயம் கேக்காது ஆத்தா; மந்திரிச் சாத்தான் கேக்கும்.’’
வைத்தியச்சியே இப்படிச் சொன்னதுக்கு அப்பறம் மறுபேச்சு இருக்கா? பிள்ளையத் தூக்கி நடந்துட்டா வடவீர நாயக்கன்பட்டிக்கு.
வடவீர நாயக்கன்பட்டி நாயக்கரு மந்திரிக்கிறதுல மன்னன். வேப்பங்கொழ நாயக்கருன்னுதான் சொல்றது அவர. சொந்தப் பேரு மறந்துபோற அளவுக்குத் தொழில் பெருத்த கையி. வத்திப் போனாலும் கரையெல்லாம் பச்சை கட்டி நிக்கிற ஆத்தாங்கர மாதிரி வயசானாலும் லட்சணம் மாறாத ஆளு.
பச்ச உருமா; செவப்புக் கடுக்கன்; கரும்புச் சக்கை மாதிரி கனத்த மீசை. கழண்டு விழுந்திர்ற மாதிரி ரெண்டு கண்ணு; ஈரக்கொலைய இழுத்து இறுக்கிப் புடிக்கிற பார்வை.
கனத்த கம்பளிய விரிச்சு உட்காந்தாரு; தாய் மடியில பிள்ளைய உட்காரவச்சாரு. பொங்கப் பானையில புதுத் தண்ணி ஊத்தி ஒடிச்ச வேப்பங்கொழைய ஊறப்போட்டாரு. கண்ண மூடி ‘முணுமுணுமுணு’ன்னு எதோ மந்திரம் சொன்னாரு. வேப்பங்கொழையச் சட்டுன்னு எடுத்து, பிள்ள மூஞ்சியில தண்ணி தெறிக்க அடிச்சு மந்திரிச்சாரு. வேப்பங்கொழத் தண்ணிய ‘நீ குடி மொதல்ல’ன்னு தாய் குடிக்க வச்சாரு; ‘பிள்ளைக்கும் குடு’ன்னு குடுத்தாரு.
அழுகை அடங்கிப்போச்சு அழகுசிங்கத்துக்கு.
நாயக்கரு மந்திரிச்சதும் ‘குணக் குறி தெரியுதே’ன்னு குளுந்துபோனா கருவாச்சி; மந்திரம் போட்டு மந்திரிச்சதுல புடிச்ச பீடை விட்டுப்போச்சுங்கறது அவ கணக்கு. ஆனா அது இல்ல காரணம். குண்டாச்சட்டியத் தலையில கவுத்த மாதிரி நாயக்கரு கட்டியிருந்த உருமா & சிவீர்ன்னு கண்ணுல அடிக்கிற கடுக்கன், வாய மூடித் தாடையத் தடவுற மீச, ‘அழுதேன்னா கொன்னேபுடு வேன்’னு கண்டிப்பாச் சொல்ற கண்ணு... இதுகளை யெல்லாம் பாத்துப் பாத்து இந்தப் புது பயத்துல பழைய பயத்த மறந்துபோனான் பய.
இந்த ‘நெசம்’ நாயக்கருக்கும் சின்னப்பயலுக்கும் மட்டும்தான் தெரியும்.