<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d20242795\x26blogName\x3d%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodireader.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodireader.blogspot.com/\x26vt\x3d1499038088815249401', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

என் நூலகம்

இது என் ரசனையின் பத்தாயம். படைப்பாளிகளே எழுத்தின் உரிமையாளர்கள். சேமிப்பில் ஏதும் ஆட்சேபம் இருப்பின் செய்து அறியத்தரவும்.

 

கோபிகிருஷ்ணன்


ஜ்யோவ்ராம் சுந்தர் : கோபிகிருஷ்ணனின் வாழ்க்கை - அவர் வார்த்தைகளில்

(பகுதி 1) ::

(குறிப்பு : மழை சிற்றிதழுக்காக கோபிகிருஷ்ணனை யூமா வாசுகி எடுத்த நேர்க்காணல் இது. என்னைப் பற்றி நானே சொல்லிவிடுகிறேன்; கேள்விகள் வேண்டாம் என்று கோபிகிருஷ்ணன் பேட்டியின் ஆரம்பித்திலேயே சொல்லிய பேட்டி! மழை சிற்றிதழுக்கு நன்றியுடன் இதை நான்கு பகுதிகளாகப் பதிவிடுகிறேன். இதழைத் தேடிக் கொடுத்துதவிய பைத்தியக்காரனுக்கு எப்போதும் போல் என் அன்பு).

நான் 23 ஆகஸ்ட் 1945ல் மதுரையிலே ஜடாமுனி கோயில் தெரு, மீனாட்சியம்மன் கோயில் அருகில் பிறந்தேன். எனக்கு இப்போ வயசு 56. முதல் தம்பி பெயர் நாகராஜன். எம்.எஸ்ஸி., எம்.எட்., படித்திருக்கிறான். அவன் திருவொற்றியூர் வெள்ளையஞ் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறான். அடுத்து தங்கை மீரா. தங்கை கணவருக்கு நரம்புத் தளர்ச்சி நோய் (parkinsons disease). கழுத்து, கைகள் ஆடிக்கொண்டே இருக்கும். அதனால் அவர் எந்த வேலைக்கும் போக இயலவில்லை. மீரா தன் மகனிடமிருந்து பண உதவி பெற்று வாழ வேண்டியிருக்கிறது. மீராவுக்குப் பிறகு ஹம்ஸா. திருவ்ண்ணாமலையில் எய்ட்ஸ் ப்ராஜக்டில் வேலை செய்கிறாள். அவளுக்கு வயது 50. அடுத்த தங்கை இந்திராவின் குடும்பம்தான் இருப்பதிலேயே மிகவும் ஏழ்மைப்பட்ட குடும்பம். பிளாட்பாரத்தில் கண்ணாடி வளையல் போட்டு வியாபாரம் செய்கிறார். அயனாவரம் நம்மாழ்வார்பேட்டை மார்க்கெட் பகுதியில் இருக்கிறது அவர்களின் கடை. இந்திராவுக்குப் பிறகு உள்ள தங்கை கீதா பி.எஸ்ஸி ஸூவாலஜி படித்தவர். காஞ்சிபுரத்தில் நல்ல வசதியான நிலையில் வசிக்கிறார். அவர் கணவர் உதயகுமார், காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மையத்தில் வேலை செய்கிறார். கீதாவுக்குப் பின்னுள்ள தம்பி தேவராஜன் பி.டெக்., எம்.எஸ் கம்ப்யூட்டர் படித்து அமெரிக்காவில் வேலை செய்கிறார். மிகவும் வசதியான குடும்பம் இவர்களுடையதுதான். தேவராஜன் மனைவி அமுதாவும் எம்.எஸ். கம்ப்யூட்டர் படித்தவள்.

பள்ளியிறுதி வரையிலும் மதுரை வாசம். படித்தது சௌராஷ்ட்ரா ஹைஸ்கூல். அது 1961ம் ஆண்டில். அப்பாவின் பூர்வீகம் பரமக்குடி.

சென்னையில் துணிக்கடை ஒன்றில் அப்பாவுக்கு வேலை. தாத்தா சுதந்திரப் போராட்டத் தியாகி. மதுரை எம்.எஸ். சுப்பைய்யர். சௌராஷ்டிரர்கள் தங்களை பிராமணர்கள் என்று நினைத்துக் கொண்டு தங்கள் பெயரின் பின்னால் பிராமண ஓட்டுக்களைப் போட்டுக் கொள்கிறார்கள். என் அப்பா பெயர் என்.பி. கிருஷ்ணமாச்சாரி, மாமனார் பெயர் கோபால் ராவ், தாத்தாவின் பெயர் சுப்பைய்யர். சௌராஷ்டிரர்கள் பூணூல் போட்டுக் கொள்ளும் பழக்கம் உள்ளவர்கள். அம்மாவழித் தாத்தா இவர். நிலம் நீச்சுடன் மிகவும் வசதியாக வாழ்ந்தவர் தாத்தா. சொந்தமாக கதர்க்கடை ஒன்றும் வைத்து நடத்தி வந்தார். கதர்க்கடையை தாத்தா மூடிவிட்ட பிறகு அவருக்கு மனநிலை சரியில்லாமல் போய்விட்டது. தற்கொலைக்கு முயற்சி செய்யுமளவு பாதிக்கப்பட்டிருந்தார். அதிர்ஷ்டவசமாக அம்முயற்சியிலிருந்து காப்பற்றப்பட்டார். பாட்டிக்கு மதுரைதான். அப்பா அம்மா மட்டும்தான் சென்னையோடு தொடர்புடையவர்கள். தாத்தாவின் மனநோயின் பொருட்டு பாட்டி அவரைக் குணசீலத்தில் சேர்த்தாள். ஒரு மண்டலத்திற்கு, தாத்தாவின் நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த இரண்டு ஆட்கள் அவருடன் இருந்து அப்போது பார்த்துக் கொண்டார்கள். ஒரு மண்டலம் முடிந்து வீட்டிற்கு வந்த உடனே தாத்தா இறந்து போனார். அவர் தலை மொட்டையடிக்கப்பட்டிருந்தது. உடல் வெகுவாக மெலிந்திருந்தது. அந்த நேரத்தில் நான் சென்னையில் பி.ஏ. முதலாண்டு படித்துக் கொண்டிருந்தேன். பிரசிடென்சி காலேஜ். பி.ஏ. சைக்காலஜி. 1962லிருந்து 65 வரை. முதலாமாண்டு படிக்கும்போது அம்மா அப்பாவுடன்தான் இருந்தேன். கணக்கில் மிகவும் பின்தங்கியவன் நான். எஸ்.எஸ்.எல்.சி.யில் கணக்கு அறவே பிடிக்காமல் போய்விட்டது. பால்யத்தில் நான் நன்றாகப் படித்ததினால் மூன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பிற்கு முன்னேற்றப்பட்டேன். நான்காம் வகுப்பு கணக்குப் பாடம் படிக்க முடியாமல் போய் அந்தப் பிரச்சனை இன்றும் தொடர்கிறது.

பி.ஏ. ஆன்ஸிலரி புள்ளிவிவரவியலும் லாஜிக்கும். புள்ளிவிவரவியல் பாஸ் பண்ணுவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. ஆரம்பத்திலிருந்தே, எஸ்.எஸ்.எல்.சி. காலத்திலிருந்தே சைக்காலஜியில் ஆர்வம். தாத்தா இறந்த பிறகு அந்த ஆர்வம் கூடுதலாகியது.

கோ-எஜூகேஷன் கல்லூரி அது. இயல்பிலேயே கூச்ச சுபாவமுடையவன் நான். பெண்களிடம் பழகுவதில் கூச்சம் மிக அதிகமாயிருந்தது. இதற்குக் காரணம் என் பாட்டிதான். பாட்டி வீட்டிலேயே பஜனை மண்டலி வைத்திருந்தாள். வீட்டில் சிறு கோயிலும் இருந்தது. எல்லா தெய்வ விக்ரகங்களும் உள்ள கோயில். தினமும் காலையில் பூஜை நடக்கும். பூஜையை நான்தான் செய்ய வேண்டும். மாலைகளில் பஜனை நடக்கும். எட்டாம் வகுப்பு வரையிலும் பூஜை செய்வதில் பாட்டிக்கு உதவி செய்து கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் பூஜைக்கு, பஜனைக்கு வரும் எல்லாப் பெண்களையும் உறவு முறையில் மாமி, அக்கா, அத்தை என்றுதான் அழைப்பேன். இதனாலெல்லாம் கூச்சம் உருவாகிவிட்டது. பாட்டியினுடையது பெரிய வீடு. சுமார் இருபது பெண்களுக்குமேல் வழிபாட்டிற்கு வருவார்கள்.

அரசு கலைக் கல்லூரியிலிருந்து எகனாமிக்ஸ் படிக்கவும் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலிருந்து ஆங்கில இலக்கியம் படிக்கவும் மாநிலக் கல்லூரியில் உளவியலுக்கும் வாய்ப்புகள் அமைந்தன. நான் உளவியலையே தேர்வு செய்தேன். சீட் கிடைப்பது அப்போது மிகவும் எளிது. நன்கொடைகளோ சிபாரிசுகளோ தேவையில்லை. மூன்றாம் வருடம் படிக்கும்போது ஒரு பெண்ணுடன் மானசீகக் காதல் ஏற்பட்டது. அந்தப் பெண் அப்போது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு நான் மாலை நேரத்தில் ஹிந்தி டியூசன் எடுத்தேன். அந்தப் பெண்மீது எனக்கு முழு ஈடுபாடு இருந்தது. அறியாப் பருவத்தில் வரும் ஈடுபாடு, காதல், உணர்ச்சி வேகம். இதைத்தான் calf love என்று சொல்வார்கள்.

என் கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு வீடு வறுமையினால் சூழப்பட்டு விட்டது. என்னை வேலைக்குப் போகச் சொல்லி அப்பா தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டிருந்தார். நான் முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே ‘நீ படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்குப் போ. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்' என்று சொன்னவர்தான் அப்பா. நான் விடாப்பிடியாகப் படித்தேன். படிப்பை முடிப்பதற்கு எனக்கு மூன்று நண்பர்கள் உதவினார்கள். ஹிந்தி டியூசனிலிருந்து எனக்குக் கொஞ்சம் பணம் வந்தது.

மெட்ராஸ் எஜூகேஷனல் ரூல்ஸ் (92 எம்.இ.ஆர்) படி ஆஃப் ஃபீஸ் கன்ஸஷன் கொடுத்தார்கள். அதன்படி நான் பாதியளவு பணம் கட்டினாலே போதும். அரிஜன் வெல்ஃபேர் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. என் அம்மாவின் தம்பியாகிய மாமா வாரத்திற்கு 5 ரூபாய் கொடுப்பார். 5 ரூபாய் அந்தக் காலத்தில் மிகப்பெரிய தொகை. அதை வைத்துச் சமாளித்துப் படித்தேன். நான் கல்லூரியில் படிக்கும்போது ஒரு வேஷ்டி, ஒரு பேண்ட், ஒரு டி ஷர்ட் மட்டும்தான் இருந்தது. மூன்று வருடமும் இதே நிலைதான்.

பி.ஏ. இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும்போது என்.எம்.பதி அறையில் தங்கியிருந்தேன். காலையில் 2 இட்லி சாப்பிடுவேன். மதியச் சாப்பாடு பெரும்பாலும் கிடையாது. மாலையில் நான் ஹிந்தி டியூசன் எடுக்கும் பெண் (அவள் பெயர் அனுராதா) வீட்டில் ஒரு கப் காபி கொடுப்பார்கள். அதுதான் சாப்பாடுபோல. இரவு திருவல்லிக்கேணி பெரிய தெருவில் அரை கிளாஸ் பால் மற்றும் 2 பன்கள். அதோட சரி.

1965ல் மூன்றாமாண்டு படிக்கும்போது சமூக உளவியலாளர் ஒருவரிடத்தில் அவரது ஆராய்ச்சிக்குத் தரவுகள் சேகரித்துத் தரும் வேலையை இரண்டு மாதம் செய்தேன்.

ரிசல்ட் வந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு ராஜாஜி ஹாலில் 'மீட் த சேலஞ்ச்' (இந்திய பாகிஸ்தான் போர் பர்றிய கண்காட்சி)ல் கண்காட்சி விருவுரையாளராக ஐந்து நாட்கள் வேலை பார்த்தேன். இந்த வேலைக்கு நாளொன்றுக்கு 5 ரூபாய் சம்பளம்.

பிறகு பாரத் சேவக் சமாஜத்தின் சார்பாக வீடு வீடாகப் போய், வாங்கும் மளிகை சாமான்களின் விலையைப் பற்றி - எவ்வளவு ரூபாய்க்கு என்ன பொருள் வாங்குகிறார்கள் - தகவல் சேகரிக்கும் வேலையை இரண்டு மாதங்கள் செய்தேன். இதில் மாதம் ரூ 100 சம்பளம்.

ஓரியண்டல் ஃபயர் அண்டு ஜெனரல் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட்-இல் குமாஸ்தா உத்தியோகம் ஒரு வருடம் ஏழரை மாதங்கள் பார்த்தேன். இங்குதான் நான் டேபிள் டென்னிஸ் கற்றுக் கொண்டேன். இரண்டு பரிசுகளை வென்றிருக்கிறேன் - அரசு மருத்துவமனை மனமகிழ் மன்றத்தில் singles-ல் runner ஆகவும் doubles-ல் winner ஆகவும். டேபிள் டென்னிஸ் ஓர் அற்புதமான விளையாட்டு. எல்லா அலவன்சும் சேர்த்து மாதச் சம்பளம் 253 ரூபாய். இந்த வேலை தற்காலிகம்தான்.

அடுத்து ஒரு அரசு வேலை கிடைத்தது. லோயர் டிவிஷன் கிளார்க். ஆல் இந்தியா ஹேண்டிகிராஃப்ட்ஸ் போர்டில். சென்னையில்தான். 67லிருந்து 69 வரையில் ஒரு வருஷம் நான்கு மாதங்கள். மாதச் சம்பளம் ரூ 300. அப்போது மாலை வகுப்பில் டிப்ளமோ இன் ஆந்த்ரோபாலஜி (மானிடவியல்) மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் சேர்ந்தேன். இது இரண்டு வருடப் படிப்பு. புரபேஷன் பீரியடிலேயே அரசு வேலையை ரிஸைன் செய்து விட்டேன்.

அரசு பொது மருத்துவமனையில் செயற்கை அவயங்கள் நிலையம் - புனர்வாழ்வ்ய் மையத்தில் அடுத்த வேலை. அது கைகால் இழந்தோருக்கான புனர்வாழ்வு மையம். என்னுடைய கல்வித் தகுதிக்கு ஏற்றாற்போல ஒரு வேலையை அங்கே ஏற்படுத்திக் கொடுத்தார்கள். மார்க்கண்டேயன் என்பவர்தான் இந்த ப்ராஜக்டின் தலைவர். அவர் என் கல்லுரியில் வகுப்புத் தோழராயிருந்தவர். என்னைவிட ஓர் ஆண்டு மேல் வகுப்பில் படித்தவர்.

அரசு வேலையை 11-4-69ல் ரிஸைன் செய்துவிட்டு 12-4-69ல் இந்தப் புது வேலையில் சேர்ந்தேன். 69ல் 23 அல்லது 24 வயது இருக்கும் எனக்கு. இந்த வேலை திருப்திகரமாக இருந்தது.

உளவியல் பரிசோதனை நடத்துதல்தான் வேலை. நோயாளிகளை பேட்டி கண்டு கேஸ் ஹிஸ்டரி எழுத வேண்டும். மாதம் 550 ரூபாய் சம்பளம். வேலை முடியும்போது தோராயமாக, 1974 வரையில் 5 வருடங்கள் இந்த வேலையில் இருந்தேன். இந்த வேலைதான் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனை. எப்படியென்றால் முதலில் ஒன் இயர் ரிசர்ச் அண்டு டெமான்ஸ்ட்ரேஷன் ப்ராஜெக்ட் ஆக இருந்தது. அதில் ஒரு கிறிஸ்துவப் பெண். என் வயதுதான் இருக்கும். அவள் என்னுடன் நெருங்கிப் பழகினாள். பிரதி ஞாயிறு எங்கள் வீட்டிற்கு வருவாள். அவளுக்கு நான் ஆங்கில இலக்கணம் டியூசன் எடுப்பேன். அவள் ரொம்ப அழகு. என்னைவிட உயரம். அந்தக் காலத்து கே.ஆர்.விஜயா சாயல்ல இருப்பா. ஒன் இயர் ப்ராஜக்ட் முடிந்தவுடன் அவள் போய் விட்டாள். நான் தொடர்ந்தேன். அவள் மேல் ஒரு எமோஷனல் அட்டாச்மெண்ட் இருந்தது. அதைக் காதல் என்று சொல்ல முடியாது. அவள் சென்று வெகுநாட்களான பிறகு அவளிடமிருந்து ஒரே ஒரு லெட்டர் வந்தது. இந்தச் சமயத்தில் அடுத்த ப்ராஜக்ட் தொடரும்போது என் கல்யாணத்திற்கான ஆயத்தங்களை என் பெற்றோர்கள் 72-ல் செய்தார்கள். திடீரென்று ஒரு நாள் அந்தக் கிறிஸ்தவப் பெண் என் அலுவலகத்திற்கு வந்தாள். நான் அவளிடம் ‘என் கல்யாணத்திற்குப் பெண் பார்க்கிறார்கள்' என்றேன். அவள் ‘இனி நாம் பழைய மாதிரி பழக முடியாதே' என்றாள். இதுதான் இண்டிகேஷன். இதன் மூலம்தான் அவளுக்கு என்மீது காதல் இருப்பது எனக்குத் தெரிகிறது. அவள் பெயர் நான்ஸி.

அந்தக் கிறிஸ்தவப் பெண்ணிற்கு ஏற்கனவே ஒரு காதல் ஏற்பட்டு அதில் அவள் தோற்றிருந்தாள். எனக்கும் ஒரு காதல் தோல்வி முன்பே இருந்தது. நான் வேலை செய்துகொண்டிருந்த அரசு பொது மருத்துவமனையில் (ஒரு வருட ப்ராக்டிஸ் முடிந்து நான்ஸி சென்ற பிறகு) ஒரு ஃபிஸியோதெரபிஸ்டும் வேலை பார்த்டு வந்தாள். அவள் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவள். அவளுக்கு தன் கணவனைத் தவிர வேறு தொடர்பு இருந்ததுதான் விவாகரத்திற்கான காரணம். அவளுக்கு ஆறு வயதில் பெண் குழந்தை உண்டு. ஃபிஸியோதெரபிஸ்டின்மீது ஆழமான காதல் கொண்டிருந்தேன். என் திருமணத்திற்கு முன்பு நடந்தது இது. காதல் வேகத்தால் உந்தப்பட்டு ஒரு கடிதம் எழுதி அவளிடம் கொடுத்தேன். அந்தக் கடிதம் பாலுணர்வின் வேகத்தில் எழுதப்பட்டது. மிகவும் கொச்சையானது. அதை அவள் மட்டும் படிக்காமல் சக ஊழியரான ஆண் ஃபிஸியோதெரபிஸ்டிடமும் படிக்கக் கொடுத்துவிட்டாள். அது மட்டுமின்றி அவள்பால் ஏற்பட்ட பாலுணர்வு எழுச்சிக்கான வடிகால் என்ன என்று புரியாமல், நான் ஓர் அருவருப்பானவன் என்று கருதிக்கொண்டு மிகவும் குழம்பிய நிலையிலும் குற்ற உணர்விலும் உருக்குலைந்திருந்தேன். அவளுக்கு என்னைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை. இது எனக்குப் பெரிய மனப் பிரச்சினையாகிவிட்டது. என் கடிதத்தை எல்லா ஃபிஸியோதெரபிஸ்டுகளும் மற்றவர்களும் படித்துவிட்டது போலவும் எல்லோருக்கும் என்னைப் பற்றித் தெரிந்துவிட்டது போலவும் ஒரு மாய உணர்வால் பீடிக்கப்பட்டேன். முதன் முதலாக மனதளவிலான பாதிப்பு இதுதான். இந்த மாய உணர்வு என் காதுகளில் மாய ஒலியாகக் கேட்க ஆரம்பிதுவிட்டது. ‘நீ மிகவும் மோசமானவன்... நீ மிகவும் பச்சையானவன்... நீ ஒரு காமுகன்... நீ அசிங்கம் பிடித்தவன்...' என்று என்னை எல்லோரும் திட்டுவதுபோல; கெட்ட வசவுகளால் என்னைத் துன்புறுத்துவதுபோல. என்னால் சகிக்க முடியவில்லை. ஒரு நண்பரிடம் ஆலோசனை கேட்க, அவர் ஒரு சைக்யாட்ரிஸ்டை பார்க்கும்படி அறிவுறுத்தினார்.

டாக்டர். தைரியம் என்பவரைப் போய்ப் பார்த்தேன். அவர் கொடுத்த மாத்திரைகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என் சீனியரான பாலகிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் புற நோயாளிகளின் பிரிவில் கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் ஆகப் பணிபுரிந்து வந்தார். அவரிடம் என் பிரச்சினைகளைச் சொன்னபோது, அவர் என்னை டாக்டர் சாரதா மேனனிடம் அழைத்துச் சென்றார்.

இந்த உளவியல் சிகிச்சையில் முக்கியமானது என்னவென்றால் மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும். இது அவசியமானது. நல்லபடியாகக் குணமாகிக் கொண்டு வருகிறது என்று தெரிந்தால் மாத்திரைகளின் வீர்யத்தைக் குறைத்துக் கொடுப்பார்கள்.

இந்தச் சமயத்தில்தான் அந்தக் கிறிஸ்தவப் பெண் நான்ஸி வந்து என்னை மீட்டாள். சாந்தோம் தமிழ் சர்ச் பாண்டியன் பாதிரியார்தான் எனக்கு ஞான ஸ்னானம் கொடுத்தது. உண்மையில் நான் கடவுள் நம்பிக்கையாளன் அல்ல. என் கிறிஸ்தவப் பெயர் கே. கார்ல் ராஜன் என்றானது.

12-7-72 அன்று ராமநாதபுரம் கிரைஸ்ட் சர்ச்சில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு என் நண்பர்கள் யாரும் வரவில்லை. என் பெற்றோர்களுக்குத் தெரியாமல் திடீரென்று நான் புறப்பட்டுப் போய்த் திருமணம் செய்துகொண்டேன். நான்கு நாட்கள்தான் இதற்காக விடுப்பு எடுத்துக் கொண்டேன். மணப்பெண்ணிற்கு மதுரைதான் பூர்வீகம். சென்னை வந்து வீட்டிற்குப் போகாமல் நண்பர்கள் விட்டில் தங்கினேன். என் தந்தை என்னைத் தேடி வந்து ‘நீ எங்கேயும் போகவேண்டாம். நம் வீட்டிலேயே வந்து இரு' என்றார்.

மாதம் ஒருதடவை நான் ராமநாதபுரம் போய் அவளைச் சந்திப்பேன். அல்லது அவள் சென்னைக்கு வருவாள். அவள் இங்கு வரும்போது நண்பர்கள் வீட்டில்தான் சந்தித்துக் கொண்டோம். நான் தொடர்ந்து மாத்திரைகளைச் சாப்பிடுவதைக் கவனித்த அவள் ‘எதற்கு மாத்திரை சாப்பிடுகிறாய்' என்று கேட்டாள். நான் ஒன்றுமில்லை என்று மறைத்தேன். இதனால் நான்ஸிக்கும் எனக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆயினும் எப்படியோ உறவு தொடர்ந்தது.

(பகுதி 2) ::

பிறகு அவளுக்கும் எனக்கும் பிரச்சினைகள். ஒருமுறை ராமநாதபுரம் சென்று அவள் வீட்டிலேயே 17 மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றேன். அதீத எரிச்சலினாலும், மாத்திரை சாப்பிடுவது தொடர்பான கேள்விகள் பெரிதும் இரிட்டேட் செய்ததாலும் அப்படிச் செய்தேன். நான் மாத்திரைகள் விழுங்கியிருப்பது தெரியாமல், சினிமாவுக்குப் போகலாம் என்றாள் அவள். மாலை நேரம். சரி என்று கிளம்பிவிட்டேன். அவள் தோழி ஒருத்தி எங்களுடன் வந்தாள்.

மாத்திரை சாப்பிட்டதனால் என்னால் நேராக நடக்கமுடியவில்லை. பக்கவாட்டில் சாய்ந்து தட்டுத்தடுமாறி நடந்தேன். ஏதோ சிக்கல் என்று அவளுக்குப் புரிந்து விட்டது போலிருக்கிறது. உடனே ராமநாதபுரம் ஹெட்குவார்ட்டர்ஸ் ஆஸ்பத்திரியில் என்னைச் சேர்த்து சிகிச்சையளித்தாள். குணமாக மூன்று நாட்களானது. நீங்கள் மாத்திரைகள் சாப்பிடுவதை உடனடியாக நிறுத்தினால்தான் நாம் சேர்ந்து இருக்க முடியும் என்றாள் நான்ஸி. சரி என்று ஒத்துக் கொண்டேன்.

உண்மையில் மாத்திரை சாப்பிடுவதை நான் விடவில்லை. விடக்கூடாது. அவளுக்குத் தெரியாமல் சாப்பிட்டு வந்தேன். மூன்று நாட்களுக்கு ஒன்று எனும்படி எங்களிடையே கடிதப் போக்குவரத்து நடந்தது. அவள் சென்னை வந்து என்னுடன் தங்குவதற்காக அவளது டிரான்ஸ்ஃபருக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். அவள் சென்னை வருவதில் அக்கறையில்லாமலிருந்தாள். அது எனக்கு உடனே புரிந்தது. ராமநாதபுரத்தில் அவள் பணியிடத்தில் அவளுக்கு ஆண் நண்பர்கள் அதிகம். குறிப்பாக ஒரு டாக்டருடன் அவளுக்கு மிக நெருங்கிய தொடர்பு இருந்தது. சந்தேகத்திற்குரிய தொடர்பு அது.

இந்த விவகாரத்திற்கு என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்தேன். வெறுமையும் குழப்பமும் வெறுப்புமான அலைக்கழிப்பு. அல்லாட்டம். இனி வாழமுடியாது என்று தோன்றிவிட்டது. திருமணமாகி ஒரு வருடம் முடிந்திருந்தது. ‘நீ சென்னைக்கு வா. நம் முதலாமாண்டு திருமணநாளைக் கொண்டாடுவோம்' என்று அவளை அழைத்தேன். அவள் வந்தாள். நான் ஏற்பாடு செய்திருந்த வீட்டில் தங்கினோம். அந்த வீட்டு எண் 13. நான்கு நாட்கள் கழிந்தபிறகு நான் சொன்னேன் ‘நீ யாருடன் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பழகிக் கொள். அதைப் பற்றி எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் அவர்களைப் பற்றி என்னிடம் எதுவும் சொல்லாதே' என்றேன்.

என் வேண்டுகோளைப் பொருட்படுத்தவில்லை அவள். அடிக்கடி அவள் அந்த டாக்டரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்ததும் மற்ற ஆண் பணியாளர்களைப் பற்றி மிகவும் நெருக்கமாகப் பேசியதும் என் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியது. இதை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. நிலைமை பொறுக்க முடியாமல் போனது.

திருமண முதல் ஆண்டு நிறைந்த நான்கு நாட்களுக்குப் பிறகு துக்கம் தாளாமல், அவள் தூங்கிக் கொண்டிருந்தபோது டாக்ஸி பிடித்து வெளியே சென்று நாற்பது மனநல மாத்திரைகள் வாங்கிக் கொண்டு வந்தேன். வீட்டினுள் தண்ணீர் குடித்தால் அந்த ஓசையில் அவள் விழித்து சந்தேகிக்கலாம் என்ற யோசனையில் மாத்திரைகளைக் கக்கூஸ் குழாயில் வரும் தண்ணீரைக் கொண்டு விழுங்கினேன்.

‘என்னைப் பொறுத்தவரை எல்லாம் முடிந்துவிட்டது. வாழ விருப்பமில்லாததால் நான் சாகிறேன். தயவுசெய்து என்னைக் காப்பாற்ற முயற்சிக்காதே. இனி உனக்கு முழு சுதந்திரமுண்டு. நீ எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம். உன்னை மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்' என்று கடிதம் எழுதி அவள் தலையணைக்குக் கீழ் வைத்துவிட்டு படுத்துவிட்டேன். அவள் என்னை எழுப்பிப் பார்த்திருக்கிறாள். நான் எழுந்திருக்கவில்லை. நான்ஸி என்னைக் கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்த்தாள். அங்கே என்னைப் பரிசோதித்த டாக்டர் எனக்கு கிட்னி செயலிழந்து விட்டதாகவும் உடனடி மரணம் தவிர்க்க முடியாதது என்றும் அறிவித்துவிட்டார். தலையிலிருந்து கால் வரை துணியால் மூடிவிட்டார்கள். முற்றும் பிரக்ஞை கெட்டுப் படுத்திருக்கிறேன் நான். அங்குள்ள வேறு டாக்டர் எனக்கு ஏற்கனவே நண்பராயிருந்தவர். லேசாக அவருக்குச் சந்தேகம் தட்டியிருக்கிறது. மூடிய துணியை விலக்கி என்னைத் தொட்டுப் பார்த்திருக்கிறார். சன்னமாக உயிர் இருப்பது தெரிந்தது அவருக்கு. அந்த நண்பர் LASIX இன்ஜக்‌ஷன் கொடுத்து காப்பாற்றினார். அதன் பிறகு தேறினேன்.

மருத்துவமனையில் கிடந்தபோது என்னைப் பார்க்க வந்தாள் என் மாமியார். ‘உன்னைச் சுட்டுக் கொல்ல வேண்டும். வெளியே விட்டு வைக்கக் கூடாது. எங்களை மிகவும் அவமானப் படுத்திவிட்டாய். பெருங் கேவலத்தைச் சம்பாதித்துக் கொடுத்து விட்டாய். உன் முகத்தில் விழிக்கவே வெட்கமாக இருக்கிறது' என்று வசவுக் கூச்சல் போட்டு கலங்கடித்தாள் அவள்.

என் மனைவி பார்ப்பதற்கு வருவாள். நன்றாக அலங்கரித்துக் கொண்டு சிறப்பாக வருவாள். என்னை உதாசீனம் செய்து மற்ற நோயாளிகளுடன் அரட்டையடிப்பாள். அவளும் அவளது பழைய சினேகிதனும் நான் படுக்கையில் கிடந்து போராடிக் கொண்டிருக்கையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு சந்தோஷமாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். இதையெல்லாம் என் நண்பர்கள் அவ்வப்போது என்னிடம் தெரிவிப்பார்கள். அவளிடம் ‘இனிமேல் என்னைப் பார்க்க வரவேண்டாம்' என்று முடிவாகச் சொல்லி விட்டேன். அத்துடன் அந்தச் சாப்டர் முடிந்தது. இந்த தற்கொலை முயற்சிக்குப் பிறகு LARGACTYL மாத்திரைகளை உட்கொள்ளுவதை சுத்தமாக நிறுத்தி விட்டேன்.

என் மனைவி என்னை விட்டுப் போன நான்கே மாதங்களில் சென்னைக்கு மாற்றலாகி வந்தாள். ஓர் ஆடவரைத் திருமணம் செய்து கொண்டாள். இவை இரண்டும் அவள்மீதான என் சந்தேகத்தை மேலும் ஊர்ஜிதப்படுத்தின. ஆனால் மனநல மருத்துவர்கள் இது கற்பனைச் சந்தேகம் என்று schizophrenia paranoid என்ற மனப்பிணிக்கு மருந்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அரசு மருத்துவமனையில் வேலை செய்கிறபோது மாலை நேர வகுப்பில் சேர்ந்து போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமா இன் கிரிமினாலஜியும் ஃபேரன்ஸிக் சயின்ஸும் ஒரு வருட கோர்ஸில் படித்திருந்தேன். 1974ல் எங்கள் ப்ராஜக்ட் முடிந்துவிட்டது. அது அமெரிக்க நிதியுதவியுடன் நடந்த ப்ராஜக்ட். நிதியுதவி நின்றவுடன் எல்லோருக்கும் வேலை போய்விட்டது. பி.எல்.480 நிதி என்று பெயர். அமெரிக்காவிலிருந்து வரும். எங்கள் சீஃப் தவிர எல்லோரும் எங்கெங்கோ சிதறிப் போனோம்.

எனக்குக் கடன் தொல்லை அதிகமாகிவிட்டது. பல விதங்களிலும் கடன் வாங்கி நான்ஸிக்கு மிக அதிகம் செலவு செய்தது பெருந் தொல்லையாகி விட்டது கடைசியில். திருமண முதலாம் ஆண்டு நிறைவையொட்டி அந்தப் பெண் வந்து தங்கிய நான்கு நாட்களும் செலவு மிக அதிகம். என் நண்பர் சொன்னார். ‘இங்கே இருக்காதே. வேறு எங்காவது சென்றுவிடு. முக்கியமாகச் சென்னையில் இனிமேலும் நீ இருக்காதே.'

வேலை போன அடுத்த நாளே வடக்கே புறப்பட்டேன். சில புத்தகங்களும் சில சான்றிதழ்களும் எடுத்துக் கொண்டேன். இதற்கான முன்னேற்பாடுகளை ஏற்கனவே செய்திருந்தேன். மகாராஷ்டிராவில் உள்ள சேவாக்கிராம் காந்தி மெடிக்கல் காலேஜ்-ல் கிளாக்காகப் பணிபுரிந்தவர் என் உயர்நிலைப் பள்ளி நண்பர். அவரிடம் எழுதிக் கேட்டதற்கு ‘சரி! நீ வா' என்று பதிலளித்திருந்தார். வார்தாவில் இறங்கி சேவாக்கிராம் சென்று அங்கு ஒரு மாதம் இருந்தேன்.

அந்த நண்பர் போதிய பணவசதி இல்லாதவர். திரும்பத் திரும்ப என்னைச் சென்னைக்கே சென்றுவிடும்படி கூறிக்கொண்டிருந்தார். பி.ஜி.பிரகாசன் அவர் பெயர். நான் சென்னை செல்லாமல் மகாராஷ்டிரா மாநிலம் புசாவலுக்குச் சென்று அங்கிருந்து பாம்பே சென்றேன். எல்லாமே டிக்கெட் இல்லாத பயணம்தான்.

பாம்பே ரயிலில் செக்கிங் இன்ஸ்பெக்டரிடம் அகப்பட்டுக் கொள்ளும்படி ஆகிவிட்டது. என்னைப் பற்றி விசாரித்து ஐந்து ரூபாயைக் கேட்டு வாங்கிக் கொண்டு போனார். பாம்பேயில் இறங்கி டிக்கெட் கேட் கடக்கும்போது இன்னொரு பரிசோதகர் பிடித்துக் கொண்டார். ‘நான் இங்கே பிழைப்பதற்காக வந்திருக்கிறேன். எனவே என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம்' என்று நான் அவரைக் கேட்டுக் கொண்டதன் பேரில் மனமிரங்கி விட்டுவிட்டார். ஏதாவது சாப்பிட்டாக வேண்டியிருந்தது. ஒரு ஹோட்டலுக்குச் சென்று வேலை வேண்டினேன். அந்த ஹோட்டலில் வேலை எதுவும் காலியாக இருக்கவில்லை.

இரவில் எங்கே தங்குவது என்று பிரச்சினையாகிவிட்டது. தாராவிக்குப் போய் அங்கு ஒருவரிடம் என் சிரமங்களையெல்லாம் எடுத்துச் சொன்னேன். அவர் வீட்டுப் பரணில் படுத்துக் கொள்ளும்படி அனுமதித்தார். தங்க மட்டுமே இடம். இதற்குப் பணம் கொடுக்க வேண்டியது இல்லை. கையில் சுத்தமாகப் பணம் கிடையாது. எடுத்து வந்திருந்த சில புத்தகங்களை எடைக்குப் போட்டு ஒரு பொட்டலம் வேர்க்கடலை வாங்கிச் சாப்பிட்டேன். மொத்தமாக மூன்று நாட்கள்தான் பாம்பேயில் இருந்திருப்பேன். சோர் பஜாரில் என் துணிகளை விற்றதன்மூலம் கொஞ்சம் சில்லறை தேறியது சாப்பிடுவதற்கு.

அடுத்த நாள் வேறு ஒரு ஹோட்டலில் வேலை கேட்டேன். விண்ணப்பம் எழுதிக் தரும்படி சொன்னார், அங்கு பொறுப்பிலிருந்தவர். நான் எழுத முயற்சித்தேன். கை நடுங்கியது. எழுத்து சரியாக வரவில்லை. இதைப் பார்த்துக் கொண்டிருந்தவர் வேலை தர இயலாது என்றும் சாப்பிட்டுவிட்டுச் செல்லும்படியும் கூறினார். ‘வேலை தந்தால்தான் சாப்பிடுவேன்' என்றேன் நான். ‘இந்த ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் வேண்டாம். சும்மா சாப்பிடுங்கள்' என்று அவர் கேட்டுக் கொண்டபிறகு மூன்று சப்பாத்திகள் சாப்பிட்டேன்.

அப்படியே நடந்து கொண்டிருந்தபோது சென்னை திருவல்லிக்கேணி ஜிம்கானா கிளப்பில் டேபிள் டென்னிஸ் விளையாடும் நண்பர் ஒருவரைப் பார்த்தேன். இரண்டு இட்டிலி வாங்கிக் கொடுத்து கையில் கொஞ்சம் காசு கொடுத்து சென்னைக்குப் போய்விடும்படி சொன்னார் அவர்.

பாம்பேயிலிருந்து டிக்கெட் இல்லாமல் ஹைதராபாத் போனேன். அப்போது என்னிடம் ஒரு சட்டையும் பேண்டும் மட்டுமே இருந்தது. ஹைதராபாத்தில் எனக்கு நண்பரான ஒரு சைக்காலஜிஸ்ட் இருந்தார். அவரிடம் ஊர் திரும்புவதற்கு உதவும்படி கேட்டேன். 'நீ இங்கிருந்து கடிதம்போட்டு உன் அப்பா அம்மாவிடமிருந்து பணம் வாங்கிப் புறப்பட்டு போ. நான் பணம் தரமாட்டேன்' எனக் கறாராகக் கூறினார் அவர். இது சிக்கலான ஏற்பாடாகத் தெரிந்தது. ரயில் ஏறிவிட்டேன். இப்போதும் டிக்கெட் பரிசோதகரிடம் சிக்கித் தப்பினேன். ஓங்கோல் வந்து அங்கிருந்து சென்னைக்கு ரயில் பிடிக்க வேண்டும். கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ஏறியபோது எதிர்பட்டார் டிக்கட் பரிசோதகர். நான் என்ன செய்வதென்று நிதானிப்பதற்குள் ரயில் வேகமெடுத்துவிட்டது. வேறு வழியின்றி குதித்துவிட்டேன். முழங்காலில் பலமாக அடிபட்டு விட்டது. வலியினால் நகர முடியாமல் விழுந்த இடத்திலேயே வெகுநேரம் கிடந்தேன். பிறகு மெதுவாக நடந்து சென்று ரயில்வே ஸ்டேஷன் பெஞ்சில் அமர்ந்தேன். யாரோ ஒருவர் பேச்சுக் கொடுத்தார். தெலுங்குக்காரர். தமிழை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு டீ வாங்கிக் கொடுத்தார். அங்கிருந்த ஒரு லாரி டிரைவரிடம் என்னை சென்னைக்குக் கொண்டுபோய் சேர்த்து விடும்படி சொன்னார். லாரி இரவில்தான் கிளம்பும். என்னிடம் பணமில்லாததால் என் சட்டையையும் கைலியையும் வாங்கிக் கொண்டார் டிரைவர். அடுத்த நாள் காலை லாரி போரூர் வந்து சேர்ந்தது. ‘இதுதான் சென்னை. நீ இங்கேயே இறங்கு' என்றார் டிரைவர். நான் அவர் சொன்னபடி செய்தேன். கையில் கொஞ்சம் சில்லறையும் கொடுத்து இறக்கிவிட்டார் அவர். நான் கொசப்பேட்டையிலிருந்த என் வீட்டிற்குச் சென்றேன். வீட்டில் யாருமே என்னை எதிர்கொள்ளவில்லை.

தனக்குத்தானே பேசிக் கொள்ளும் பழக்கம் தொற்றிக் கொண்டது. இரவுகளில் தூக்கமில்லை. ஓயாத மன உளைச்சல். எதை எதையெல்லாமோ நினைத்து அடிக்கடி அழுது கொண்டிருந்தேன். ஒரு நிலைக்குப் பிறகு சிகிச்சை எடுத்தே தீரவேண்டுமென்று தோன்றிவிட்டது. நண்பர் பாலகிருஷ்ணன் மூலமாக (கிளினிகல் சைகாலஜிஸ்ட்) அரசு மனநலக் காப்பகத்தில் சேர்ந்தேன்.

1974ல் 45 நாட்கள் அங்கு சிகிச்சை எடுத்துக் கொண்டேன். அந்த நேரத்தில் அங்கே சூப்பிரிண்டெண்டெண்ட் ஆக இருந்தவர் டாக்டர் சாரதா மேனன். எந்த இடையூறும் இல்லாதபடி சீராகவும் சரியாகவுமிருந்தது மருத்துவமனைச் சூழல். சிகிச்சையும் சிறப்பான வகையில் இருந்தது.

போக்கிடமென்று எதுவும் இல்லாமலாகிவிட்டது. பாட்டிக்குக் கடிதம் எழுதினேன். பாட்டி கடிதமும் பணமும் அனுப்பியிருந்தாள். டிஸ்சார்ஜ் ஆகி மதுரைக்கு என் பாட்டியிடம் புறப்பட்டுப் போனேன். வேலை தேடியபடி 9 மாதங்கள் அங்கேயே இருந்தேன்.

அந்தச் சமயத்தில் மதுரை அதீனத்தின்மூலம் மறுபடி இந்து மதத்திற்கு மாறி என் இயற்பெயரைப் பெற்றேன்.

மேற்கொண்டு மருத்துவச் செலவு செய்ய பாட்டி விரும்பவில்லை. ‘நீ சென்னைக்கு போ'வென்று பாட்டி சொன்னதால் திரும்பவும் சென்னை வந்தேன்.

ஒரு நண்பரின் வீட்டுத் திண்ணையில் இரவில் படுக்கை. தெருக்குழாயில் காலைக் குளியல். சமயங்களில் கட்டணக் கழிப்பறையில். வேலை தேடுவதைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தேன்.

நண்பர் ஒருவர் மூலமாக ராமாராவ் பாலிகிளினிக்கில் 1975ல் வேலைக்குச் சேர்ந்தேன். மாத ஊதியம் ரூ 200. அங்கு வேலை பார்த்த காலம் இரண்டரை வருடங்கள். பாலிகிளினிக்கில் ஒரு தோழி கிடைத்ததுதான் சந்தோஷம். அவளோடு தந்தை மகள் மாதிரியான உறவு. அவளுக்கும் தலைமை மருத்துவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு அவள் காஞ்சிபுரத்திற்குப் போனாள். நான் பாலிகிளினிக்கிலேயே தொடர்ந்தேன். நான் தொடர்ந்து மனநல மாத்திரைகள் சாப்பிட்டு வந்தேன். பெரிய ஜாப் எதுவும் என்னால் செய்ய இயலாதபடி மனநிலை பாதிப்படைந்திருந்தது. சில காலத்திற்குப் பிறகு பெரிய வேலை செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்தபோது க்ரியா ராமகிருஷ்ணனைச் சந்தித்து நிலைமையைச் சொன்னேன். எனக்கு வேலை தரும்படி வேண்டினேன்.

ராமகிருஷ்ணன் IMRB (இண்டியன் மார்க்கெட் ரிஸர்ச் பீரோ) வில் வேலை வாங்கித் தந்தார். அவர் என் நண்பரின் கல்லூரித் தோழர். இங்கே ஐந்து வருடங்கள் வேலை பார்த்தேன். வீடு வீடாகப் போய் சிகரெட் - பேட்டரி - கார்பெட் இவை பற்றி விவரங்கள் சேகரிக்க வேண்டும்.

மே 1980ல் திரும்பவும் பெரிய மனபாதிப்பு ஏற்பட்டது. மறுபடியும் மாய ஒலிகள் காதில் கொடூரமாக ஒலிக்க ஆரம்பித்தன. ‘நீ எதற்கும் தகுதியில்லாதவன்... நீ வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து விட்டாய்... இனிமேலும் நீ உயிருடன் இருக்க முடியாது...' இப்படி. அலுவலகம் மூலமாகவே அரசு மனநலக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டேன்.

சேர்ந்து ஐந்தாம் நாளிலேயே சரியாகிவிட்டது. ஆனால் அவர்கள் டிஸ்சார்ஜ் கொடுக்காமல் பத்து நாட்கள் வைத்திருந்தார்கள். வேலைக்குப் போனேன். என்னை உடனே வேலையில் சேர்க்காமல் ஒரு மாதம் ஓய்வு எடுக்கச் சொல்லி ஒரு மாதச் சம்பளமும் கொடுத்தார்கள். அதற்குப் பிறகு ஐம்ஆர்பி யில் முழுநேரமாகவும், க்ரியாவில் பகுதிநேரமாகவும் வேலை செய்தேன்.

இந்தக் காலத்தில் ந. முத்துசாமி எழுதிய ‘நாற்காலிக்காரர்கள்' புத்தகத்தையும், ‘சூரியனின் கடைசி கிரணத்திலிருந்து முதல் கிரணம் வரை' (ஹிந்தியிலிருந்து சரோஜா மொழிபெயர்ப்பு செய்தது) எனும் புத்தகத்தையும் கிரியா ராமகிருஷ்ணன் கொடுத்தார். இதற்கு முன்னால் மு. வரதராசன், ஹேமா ஆனந்ததீர்த்தன், சா. கந்தசாமி இவர்களை மட்டும் படித்திருந்தேன்.

மீண்டும் எனக்குப் பெண் துணை அவசியப்பட்டது. அம்மாவிடம் சொன்னேன். அம்மா புரோக்கர் மூலம் இப்போதிருக்கிற என் மனைவியைப் பெண் பார்த்தார். திருவொற்றியூர் திருமண மண்டபத்தில் 20-10-80ல் திருமணம் நடந்தது. ஐ எம் ஆர் பி நண்பர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். திருமணத்திற்கு முன் லாட்ஜில் தங்கியிருந்தேன். பிறகு மைலாப்பூரில் தனிக்குடித்தனம்.

(பகுதி 3) ::

திருமணம் முடிந்து வந்த முதல் சிக்கல் - ஏன் மாத்திரை சாப்பிடுகிறீர்கள் என்று என் மனைவி தொடர்ந்து கேட்ட கேள்விகள். எனக்குத் தலைவலி, தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும் என்று ஒருவாறு சமாளித்தேன். வாழ்க்கை தன்போக்கில் நடந்து கொண்டிருந்தது. நீங்கள் அலைந்து திரிய வேண்டாம் க்ரியாவுக்கே வந்துவிடுங்கள் என்று சொன்னார் ராமகிருஷ்ணன். அதை ஏற்று க்ரியாவுக்கே வேலைக்குப் போக ஆரம்பித்தேன். க்ரியா அப்போது ராயப்பேட்டையிலிருந்தது.

பெண் குழந்தை பிறந்தது. குழந்தையைப் பார்க்கும் போது ‘ராணி' எனும் பெயர் பொருத்தமாகத் தெரிந்தது. 'ராணிஸ்ரீ'ன்னு வச்சிட்டேன். 1983 முடிவில் குழந்தை பிறந்த பிறகுதான் எழுத ஆரம்பித்தேன். இதற்கு முன்பு ஒரு முயற்சியாக 73ல் தூயோன் எனும் சிறுகதை எழுதியதைச் சொல்ல வேண்டும். அதை ஞானக்கூத்தனிடம் காட்டினேன். நன்றாக வந்திருப்பதாகச் சொன்னார் அவர். அந்தக் கதையை பிரசுரிக்கத் தோன்றவில்லை. அதை 86ல் திரும்பவும் எழுதினேன். அது விருட்சம் இதழில் பிரசுரம் ஆனது. 78ல் ராமராவ் பாலிகிளினிக்கில் வேலை செய்தபோது கிடைத்த தோழியைப் பற்றி (அவள் என்னை டாடி என்று அழைப்பாள்) ஒரு கதை எழுதினேன். அது ‘மையம்' பத்திரிகையில் 84 ஜனவரி - மார்ச் இதழில் வெளியானது. இதுதான் முதல் வெளியீடு. மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். தொடர்ந்து எழுதினேன். நிறைய கதைகள் சேர்ந்தன. கதைகள் நன்றாயிருக்கின்றன என்றார் ஆனந்த். நகுலனிடம் கதைகளைக் காட்டச் சொன்னார். இரு தினங்கள் கழித்து க.நா.சு தங்கியிருந்த அறைக்கு நகுலன் வந்திருந்தார். ஆனந்தும் நானும் சேர்ந்து என் ஏழு கதைகளை நகுலனிடம் கொடுத்தோம்.

அடுத்தநாள் கடற்கரையில் நகுலனை ஞானக்கூத்தனோடு பார்த்தோம். ‘இந்தக் கதைகளை எனக்குப் பிடித்திருக்கிறது. என்னிடம் பணம் இருந்தால் புத்தகமாகப் போடுவேன்' என்றார் நகுலன். நகுலன் சொன்னதை ஜெயதேவன் (வி.ராஜகோபால்) மனதில் வாங்கி அவரே பதிப்பித்தார். "ஒவ்வாத உணர்வுகள்" மார்ச் 86ல் வெளியானது.

தொகுப்பு அச்சில் இருந்த நிலையில் மிகத் துக்ககரமான சம்பவங்கள் நிகழ்ந்தன. என் மனைவி, வீட்டில் இருக்கப் பிடிக்காமல் ஏதேனும் வேலைக்குப் போகிறேன் என்றாள். நான் இந்த விஷயத்தை திலீப்குமாரிடம் சொன்னேன். ராயப்பேட்டை முத்தமிழ் பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை இருப்பதாகப் பரிந்துரைத்தார் திலீப். என் மனைவியின் கல்வித் தகுதி 7ம் வகுப்பு. ஒரே மாதத்தில் கம்பாசிடர் வேலையைக் கற்றுக் கொண்டாள். அவளிடமுள்ள வினோத வழக்கம் என்னவென்றால் கையில் காசில்லை என்றால் முழுக்கவும் அப்செட் ஆகிவிடுவாள்.

அவள் வசதியான வீட்டில் நல்லபடியாக வளர்ந்தவள். என் கையில் காசு தீர்ந்து போனால் நண்பர்களிடம் கடன் வாங்கியாவது வைத்துக் கொள்வேன். ஒருதடவை சுத்தமாகக் காசில்லாமல் போய்விட்டது. நான் இரண்டு பித்தளைப் பாத்திரங்களை எடுத்து அடகு வைக்கப் போனேன். அன்றைக்குப் பார்த்து அடகுக்கடை லீவு. எனக்குத் தெரியாமல் போய்விட்டது. நான் திரும்பவும் பாத்திரங்களை வீட்டில் வைத்துவிட்டு க்ரியாவுக்குப் போய்விட்டேன். நண்பர்கள் சினிமாவுக்குப் போகிற மனநிலையில் இருந்தார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி நானும் சேர்ந்து கொண்டேன்.

நாங்கள் அலங்கார் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தோம்.என்ன படமென்று இப்போது நினைவில்லை. திடீரென்று படத்தை நிறுத்திவிட்டு ‘க்ரியா கோபிகிருஷ்ணன் வான்டட் இம்மீடியட்லி. ஃபிரெண்ட்ஸ் ஆர் வெயிட்டிங்' என்று சிலைடு போட்டார்கள். கீழே போனேன். ‘உன் மனைவி தற்கொலைக்கு முயற்சி செய்து ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறாள்' என்று தகவல் கிடைத்தது.

உடனடியாக அவளைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு ஓடினேன். என் மாத்திரைகளை எடுத்துச் சாப்பிடிருப்பாளோ என்று எனக்குச் சந்தேகம். வீட்டில் பரிசோதிக்கையில் அதுதான் நடந்திருந்தது. முதலில் மின்விசிறியில் தூக்கு போட்டுக் கொள்ள முயன்றிருக்கிறாள். குழந்தை கிரஷ்ஷில் இருந்தது. குழந்தையைப் பக்கத்து வீட்டுப் பாட்டி அழைத்துக் கொண்டு வந்து வைத்திருந்தார்கள்.

இந்த மாத்திரைதான் சாப்பிட்டிருக்கிறாள்; இதற்கு சரியான மாற்று கொடுத்து சரி செய்து விடுங்கள் என்று நான் டாக்டரிடம் சொன்னேன். போலீஸ் கேஸாகிவிட்டது. என்னை உள்ளே வைத்து விட்டார்கள். லாக்கப்பில் அல்லாமல் போலீஸ் ஸ்டேஷனுக்குள். அந்த வளாகத்திற்குள்தான் நான் இருக்க வேண்டும். கேஸ் புக் செய்யப்பட்டது. அங்கிருந்த இன்ஸ்பெக்டர், ‘நான் சபரி மலைக்கு மாலை போட்டிருப்பதால் அடிக்க மாட்டேன். அடிப்பதற்கு ரொம்ப நேரம் ஆகாது. உண்மையைச் சொல்லிவிடு' என்றார்.

நான் எல்லாவற்றையும் அவரிடம் விளக்கிச் சொன்னேன். என் மனைவியின் இயல்பை தெளிவாக எடுத்துக் கூறினேன். போலீஸ்காரர்கள் நம்பவில்லை. அநாகரிகமான அசிங்கமான பல கேள்விகளைக் கேட்டார்கள். ‘உன் நண்பர்கள் எவரிடமாவது உன் மனைவிக்குத் தொடர்பு உண்டா?' என்றெல்லாம் கேட்டர்கள். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் 1986 புத்தாண்டு அன்று அந்த இன்ஸ்பெக்டர் ‘ஹேப்பி நியூ இயர்' என்று எனக்குப் புத்தாண்டு வாழ்த்துச் சொன்னார்.

நான் பித்தளைக் குடங்களை எடுத்துக் கொண்டு அடகுக் கடைக்குப் போனதை பக்கத்து வீட்டுக்காரர்கள் பார்த்து என் மனைவியிடம் சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது. என் மனைவியின் உறவினர்கள் வந்தார்கள். என்னைக் கண்டித்துப் பேசி அவளை அவள் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். அவள்மீது கேஸ் ஆகிவிட்டது. சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு நானும் அவளும் சென்றோம். தற்கொலைக்கான முதல் முயற்சி என்று தண்டனையில்லாமல் விட்டு விட்டார்கள். கடைசியாக போலீஸ் ஸ்டேஷனை விட்டு வரும்போது அந்த இன்ஸ்பெக்டரிடம் நன்றி சொன்னேன். ‘நீ நன்றியெல்லாம் சொல்ல வேண்டாம். உன் மனைவியை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள். அது போதும்' என்றார் அவர். எனக்கு மனது கேட்கவில்லை. அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. க்ரியா ராமகிருஷ்ணனிடம் இதைப் பற்றிப் பேசினேன். ‘டாக்டர் இல்லாத இடத்தில்' எனும் புத்தகத்தைக் கொடுக்கச் சொன்னார். நான் கொடுத்த புத்தகத்தை மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார் இன்ஸ்பெக்டர்.

மருத்துவமனை, போலீஸ் ஸ்டேஷன் முதலான எல்லா செலவுகளையும் க்ரியா ராமகிருஷ்ணன்தான் பார்த்துக் கொண்டார். நான் போலீஸ் ஸ்டேஷனில் இருந்த நான்கு நாட்களும் க்ரியா ஸ்தம்பித்து விட்டது. அதன் பிறகு தனி ரூம் எடுத்துத் தங்கினேன். கொருக்குப்பேட்டையில் இருந்த என் மாமியாரிடம் குழந்தையின் படிப்பு தடைப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். 3.30 மணிக்குக் குழந்தையைப் பள்ளியிலிருந்து அழைத்துக் கொண்டுபோய் மாமியார் வீட்டில் விடுவேன். குழந்தை ராணிஸ்ரீ எல்.கே.ஜி. படித்துக் கொண்டிருந்தாள். ஒரு மாதம் கழித்து என் வீட்டிலிருந்து சாமான்களை மாமியார் வீட்டிற்கு எடுத்துச் சென்றேன்.

மார்ச் 86ல் ஒவ்வாத உணர்வுகளுக்கும், க.நா.சு.வின் கவிதைப் புத்தகத்திற்கும் வெளியீட்டு விழா. சிட்டாடல் பதிப்பகம் - மையம் வெளியிட்டிருந்தது.

க்ரியா டிக்‌ஷனரி ப்ராஜக்ட் 2.6.86ல் தொடங்கியது. நானும் முனைவர் பா.ரா.சுப்பிரமணியன் அவர்களும் ஆரம்ப கட்ட வேலைகளுக்காகச் சிதம்பரத்தில் மறைமலை நகரில் இருந்தோம். அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் பேராசிரியர் முனைவர் என்.குமாரசாமி ராஜா அவர்களின் உதவி டிக்‌ஷனரிக்குத் தேவைப்பட்டதால்தான் சிதம்பரத்தில் இருக்க வேண்டி வந்தது என்று நினைக்கிறேன். ஆனால் நான் இதை நிச்சயமாகக் கூற முடியாது. Policy decisions பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.

முனைவர் பா.ரா.சுப்பிரமணியனின் வீடு தஞ்சாவூரில் இருந்தது. வெள்ளிக்கிழமை மதியம் சிதம்பரத்திலிருந்து அவர் தஞ்சாவூர் புறப்படுவார். நான் சென்னை வருவேன். திங்கட்கிழமை சிதம்பரத்தில் சேர்ந்து கொள்வோம். 87ல் வேலையைச் சென்னையில் செய்ய இங்கு வந்தேன். சென்னையில் ப்ராஜக்ட் ஆபிஸ் அண்ணாநகர் (வெஸ்ட் எக்ஸ்டென்ஷன்)லிருந்தது. நான் கொருக்குப் பேட்டையிலிருந்து வருவது சிரமம். எனவே பாடியில் வீடு எடுத்தேன். 86லிருந்து மனைவி ஜனசக்தியில் கம்பாசிடராகப் பணியில் சேர்ந்தாள். சிறிய கருத்துவேற்றுமை காரணமாக 29-7-89ல் நான் க்ரியாவிலிருந்து வெளியேறினேன்.

1992ல் டிக்‌ஷனரி வெளியான பிறகு நான் மீண்டும் க்ரியாவின் நண்பனானேன். ஒன்றே ஒன்று இங்கு சொல்லத் தோன்றுகிறது. ஒரு சூழல் உறவுக்கு ஏதுவாக இல்லாவிட்டால் அந்தச் சூழலைவிட்டு பிரச்சினைக்குரிய நபர் விலக வேண்டும்; அது எவ்வளவு பெரிய ஊதியத்தை ஈட்டித்தரும் சூழலாக இருந்தாலும் சரி. இதை நான் ஒரு தார்மீகமான செயல் என்றே கருதுகிறேன். அப்பொழுதுதான் சூழலுக்கு வெளியேயாவது நட்பு நிலைக்கும். எனக்கு நட்பு மிக மிக முக்கியம்.

வங்கியில் ரெக்கரிங் டெபாசிட்டாக இருந்த 3000 ரூபாயில் செலவுகளைப் பார்த்துக் கொண்டேன். இரண்டு மாதங்கள் கழித்து வேலை கிடைத்தது. டாக்டர் சாரதா மேனனிடம் வேலை. இவர் மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவன இயக்குனராக இருந்தார். சைக்யாட்ரிக் சோஷியல் ஒர்க்கர் பணி எனக்கு. அவருடைய மாலை நேரத் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளை நேர்கண்டு கேஸ் ஹிஸ்டரி எழுத வேண்டும். பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அறிவுரை வழங்குதலும், குழு சிகிச்சையும் செய்ய வேண்டும். அது பகுதி நேரப் பணி.

அங்கு சேர்ந்த ஒரு வாரத்திலேயே Guild of Service-ல் நண்பர் ஒருவரின் சிபாரிசினால் உதவு சமூகப் பணியாளர் வேலை கிடைத்தது. இந்த வேலையில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் போகலாம் வரலாம். அங்கு முக்கியமான நெருக்கமான ஒரு தோழி இருந்தாள். ‘ஓட்டம்' கதையில் வருபவள். என்னுடன் எட்டு மாதங்கள் வேலை செய்துவிட்டு ஹாங்காங் போய்விட்டாள். அவளிடமிருந்து கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. அங்கேயே அவளுக்குத் திருமணம் முடிந்தது. ஒரு வருடம் கழித்து வந்தாள். வருடத்தில் மூன்று முறை அவளைப் பார்க்கப் போவேன். எனக்கு மனநலப் பிரச்சினைகள் அவ்வளவாக இல்லை. எழுதிக் கொண்டிருந்தேன்.

ஆனந்த், நகுலன், க.நா.சு., ஜெயதேவன், சுந்தர ராமசாமி முதலானோர் நண்பர்களானார்கள். வெங்கட் சாமிநாதன் இண்டியன் எக்ஸ்பிரஸில் என் கதைகளைப் பற்றி Curving Downwards என்று மதிப்புரை எழுதினார். பிறகு Economic Timesஸிலும் குறிப்பிட்டிருந்தார். ஞானக்குத்தன், ஆர். ராஜகோபால், ரா. ஸ்ரீனிவாசன், அழகிய சிங்கர் ஆகியோருடனும் நெருக்கமான தொடர்பிருந்தது.

நான் பார்த்ததிலேயே மிகவும் நல்ல வேலை இது (Guild). ஒரு சொர்க்கம் போல. சகல சுதந்திரங்களும் உண்டு. 2500 ரூபாய் மாதச் சம்பளம். பதவி உயர்வு கிடையாது. நான் M.A. படிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்கள். எம்.ஏ. படித்தால்தான் பிரமோஷன் எனும் நிலையில் தபால் வழியில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. சோஷியாலஜி சேர்ந்து அதை முடித்தேன். சான்றிதழ் வந்த உடனே பணி உயர்வு கேட்டதற்கு முடியாது என்று மறுத்துவிட்டார்கள். அலுவலக சூழ்நிலை அடியோடு மாறியது.

படிப்பிற்காக 5000 ரூபாயாவது செலவழித்திருப்பேன். 60 நாட்களாவது இதற்காக விடுப்பு எடுத்திருப்பேன். நான் இழப்பீடு கேட்டேன். யாரும் உதவி செய்யவில்லை. அந்தச் சமயம் பார்த்து எனக்கு மூச்சிரைப்பு ஏற்பட்டது. என் உடல்நிலை பெரிதும் மோசமடைந்தது. மூச்சுவிட இயலவில்லை. மருத்துவச் செலவு பூதாகரமாய் நின்று அச்சுறுத்தியது. வேறு வழியின்றி வேலையை ராஜினாமா செய்தேன். இதன்மூலம் கிடைத்த 28,000 ரூபாயில் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டேன். ‘கில்டி'ல் ஏழரை வருட காலம் வேலை பார்த்திருந்தேன்.

‘கில்ட்'ல் இருக்கும்போது 93ல் நானும் சஃபி மற்றும் லதா ராமகிருஷ்ணனும் ‘ஆத்மன் ஆலோசனை மையம்' என்ற அமைப்பைத் தொடங்கினோம். இதன் முக்கியமான செயல்பாடு மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு அலோசனை வழங்குவது. மையம் மூன்றரை வருடங்கள் இயங்கியது. ஆரம்பக் கட்டத்தில் நிறைய கிளையன்ட்ஸ் வந்தார்கள். என்னுடைய மனநல பாதிப்பினாலும், பிரமோஷனுக்காக எம்.ஏ. படித்துக் கொண்டிருந்ததாலும் தொடர்ந்து அதில் செயல்பட முடியவில்லை.

கில்ட் ஆஃப் சர்வீஸில் ஒரு ஃபால்ஸ் ரிப்போர்ட் எழுதப் பணித்தார்கள். ஒவ்வொரு சோஷியல் ஒர்க்கருக்கும் குறிப்பிட்ட பகுதியில் உள்ள குடும்பங்கள் ஆய்வுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும். அந்தக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்வி வசதி, மருத்துவ வசதி, வீட்டின் - வீட்டுக் கூரையின் நிலை என்ன என்பது பற்றியெல்லாம் கண்காணிக்க வேண்டும். வீட்டுக் கூரை பிரிந்தோ சேதமுற்றோ இருந்தால் அதைச் சரி செய்ய உதவ வேண்டும். லண்டன் ப்ராஜக்ட் இது. நாங்கள் டெல்லி கில்ட் ஆஃப் சர்வீஸ் அலுவலகத்திற்கு ரிப்போர்ட் அனுப்ப வேண்டும்.

ஒரு சமூகப் பணியாளர் சுமார் 250 குடும்பங்களைப் பார்க்க வேண்டியிருந்தது. இது அவ்வளவு சுலபமில்ல. ஆகவே பணியாளர்கள் ஆய்வு செய்யாமலேயே அலுவலகத்தில் இருந்தபடி அறிக்கைகளைத் தயார் செய்தார்கள். நானும் அவ்வாறு செய்யும்படி கட்டாயப் படுத்தப்பட்டேன். பார்க்காமல் ஆராயாமல் பொய்யாக என்னால் அறிக்கை எழுத முடியவில்லை. ஆனால் இதை நான் செய்தே தீர வேண்டியிருந்தது. அப்படிச் செய்யாமல் பணியில் நீடிக்க இயலாது. உடனடியாக வேறு வேலையும் கிடைக்காது.

இந்தப் பீதியினால் 3250 மில்லிகிராம் வீரியம் கொண்ட மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டுப் படுக்கையில் சாய்ந்தேன். தடயங்கள் எதையும் விட்டு வைக்கவில்லை. கதவைத் தாழ் போடாததால் திறந்து பார்த்த என் மனைவி உடனடியாக ஒரு ஆட்டோ பிடித்து கே.எம்.சி.க்குக் கொண்டு சென்றாள். அங்கே என்னைச் சிகிச்சைக்கு எடுத்துக் கொள்ள மறுத்தார்கள். ஆட்டோ டிரைவரும் என் மனைவியும் வற்புறுத்திக் கெஞ்சியதன் பேரில் சேர்த்துக் கொண்டார்கள். ஏழு நாட்கள் சுத்த மயக்க நிலையில் கிடந்தேன். இதனாலும் என்னால் ஆத்மனைக் கவனிக்க இயலவில்லை. முழுதுமாக சஃபிதான் பார்த்துக் கொண்டிருந்தார். சில குறிப்பிட்ட கேஸ்களை லதா ராமகிருஷ்ணன் எடுத்துக் கொண்டார். இதனால் கில்ட் ஆஃப் சர்வீஸ் வேலைக்குப் பாதகம் ஏற்படவில்லை. டாக்டர் சாரதா மேனன்தான் சிகிச்சை கொடுத்தது. போலீஸ் கேஸ் ஆகாமல் பார்த்துக் கொண்டார்கள். டிஸ்சார்ஜ் ஆன நாளன்று மாலையில் டாக்டர் சாரதா மேனனைப் பார்த்தேன். மருந்து மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார்கள். இந்த விஷயம் நிறைய நண்பர்களுக்குத் தெரிந்து ஒரு மாதிரியாக ஆகிவிட்டது.

எழுத்து தொடர்புடையது, அல்லாதது என்று பல இடங்களில் சிறிய சிறிய ஃப்ரீலான்ஸ் வேலைகள் பார்த்தேன். மனநிலை குன்றிய பையனை அழைத்துச் சென்று கம்ப்யூட்டர் செண்டரில் விட்டு வருதலும் அவற்றில் ஒன்று.

ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் இண்டெக்ஸர் வேலை க்ரியா ராமகிருஷ்ணன் மூலமாகக் கிடைத்தது. 4320 ரூபாய் சம்பளம். இதுவரை வாங்கியதிலேயே அதிக சம்பளம் இதுதான். இங்கு வேலை பார்த்த காலம் ஒரு வருடம் மூன்று மாதங்கள். என்னுடைய உற்ற சக-ஊழியர் ஒருவரை உதவி இயக்குனர் ஒருவர் அவமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே நான் அந்த நல்ல வேலையைத் துறந்தேன். பொருளாதார பலகீனம் தற்போதும் நீடிக்கிறது. அடிக்கடி நண்பர்களின் உதவி தேவைப்படுகிற நிலை. இரண்டு மனநோய்க் குறிகள் இன்னும் இருக்கின்றன.

1. Obsessive ruminations 2. Obsessive Depression போன்ற பிரச்சினைகள் எனக்கிருந்தன.

முதலாவது தாறுமாறான எண்ணங்கள். நான் நினைக்காமலேயே தானாகவே எண்ணங்கள் வருகின்றன. மோசமான எண்ணங்கள் அதிகம் வரும். இது மனதை மிகவும் பாதிக்கிறது. இந்த மோசமான எண்ணங்கள் என்னுள் அதிகமான அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

இரண்டாவது, ஆட்டிப்படைக்கும் மனச்சோர்வு. இதற்கான சிகிச்சையை டாக்டர் சாரதா மேனனிடம் சமீபகாலம் வரை பெற்றுக் கொண்டிருந்தேன். இப்பொழுது ESI ல் சிகிச்சை எடுத்து வருகிறேன். மனநிலை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் நான் எழுதுவதில்லை. என் இதுவரையிலான ஒட்டுமொத்த வாழ்க்கையில் மிக மகிழ்ச்சிகரமான நிலையிலிருந்தது என் மகளின் திருமணத்தின் போதுதான்.

(பகுதி 4) ::

எப்படியிருந்தாலும் ஒரு நிரந்தர வேலைக்கான அவசியம் அதிகரித்து வந்தது. மனநிலை குன்றியவர்களுக்கான பள்ளி நடத்திய ஜலாலுதீன் எனும் நண்பரும், நந்தன் பத்திரிகையின் நண்பர் ஒருவரும் என்னை நக்கீரனில் சேர்த்து விட்டார்கள். ப்ரூஃப் ரீடர் உத்தியோகம். 11 மணிநேர வேலை. 2000 ரூபாய் சம்பளம். இடையிடையில் சில கிஃப்ட்ஸ் கிடைக்கும். போனஸ் உண்டு. இங்கே நான் காலந்தவறாமையை மிகச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. கோபால் மிகவும் தங்கமான மனிதர். கோபாலின் தம்பிதான் ஆர்ட் டைரக்டர். அவருடைய பிஹேவியர் சரியில்லை. எப்போதும் அதிகார தோரணை உண்டு. ஒத்துப் போக இயலவில்லை.

முதல் நாள் இரவு 9.30 வரை வேலை பார்த்துவிட்டுச் சென்றதால் அடுத்த நாள் 11.30க்குத் தான் அலுவலகம் வர முடிந்தது. தாமதத்திற்காக முன்கூட்டியே என்னால் ஃபோன் செய்து சொல்ல இயலவில்லை. காலையில் கொஞ்சம் தூங்கிவிட்டேன். ‘ஏன் லேட்டா வர்றீங்க, ஃபோன் பண்ண முடியாதா?' என்று கத்திப் பேசினார் ஆர்ட் டைரக்டர் பிறர் முன்னால். இரவுகளில் சில சமயம் அலுவலகத்திலேயே தங்கவேண்டியிருந்தது. நக்கீரனில் இருக்கும்போதுதான் என் பெண்ணுக்குக் கல்யாணம் நடந்தது. (10 செப்டம்பர் 2000). ஒரு வருடம் 3 மாதம் நக்கீரன் வேலை. கோபாலிடம் நான் வாங்கிய கடன் 4060 ரூபாயை இன்னும் என்னால் திருப்பித்தர முடியவில்லை. எப்படியிருந்தாலும் அதைக் கொடுத்துவிடுவேன்.

அமோகமாக நடந்தது என் மகள் ராணிஸ்ரீயின் திருமணம். நண்பர்கள் உதவினார்கள். கேட்டதற்கு அதிகமாகவே பணம் கொடுத்தார்கள். 28,000 ரூபாய் செலவானது. பெண்ணும் மாப்பிள்ளையும் சந்தோஷமாக இருக்கிறார்கள். மூன்று தோழர் தோழியரின் பேருதவியால்தான் திருமணம் நடந்தது. அவர்கள் தர்மசங்கடமாக உணர்வார்கள் என்று கருதி, பெயர்களை நான் இங்கு குறிப்பிடவில்லை.

1993ஆம் ஆண்டு டேபிள் டென்னிஸை எழுதிக் கொண்டிருந்தபோது எனது முன்னாள் மனைவி நான்ஸியை மீண்டும் பார்க்கவேண்டுமென்று தோன்றியது. சென்னையில்தான் அவர் இருந்தார். சந்தித்தேன். இரண்டு குழந்தைகளுடன் கணவருடனும் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருந்தார். கணவர் புள்ளிவிவரவியல் அதிகாரி. அந்தக் குழந்தைகள்மீது கொண்ட பிரியத்தால் ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்வதாகக் கூறினேன். நான்ஸி நெகிழ்ந்து போனார். நல்ல நிலைமையில் இருப்பதால் தானே வளர்த்துக் கொள்வதாகக் கூறிவிட்டார். அவர் பெயர் அப்போதும் நான்ஸி கார்ல்ராஜன் என்றே இருந்தது. அவரது பழைய பெயருக்கே மீண்டும் மாறிக் கொள்வதற்காக விடுதலைப் பத்திரம் ஒன்று எழுதிக் கொடுத்தேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்த சந்திப்பு அது. விடைபெறும்போது, இப்போதாவது கடவுளை நம்புகிறீர்களா என்றார் நான்ஸி. இல்லை என்றேன்.

எந்தப் படைப்புகள் மீதும் கடுமையான விமர்சனங்களை நான் எழுதுவதில்லை. பிறர் எழுதுவதையும் விரும்புவதில்லை. எழுத்து ஒரு உழைப்பு. அதற்கான மதிப்பென்று நிச்சயம் உண்டு. எந்த ரூபத்திலிருந்தாலும் குரூரத்தை என்னால் சகித்துக் கொள்ள இயலவில்லை. விமர்சனம் என்ற பெயரில் காட்டுத்தனமான தாக்குதல் கூடாது. மென்மையான தொனியில் ஒன்றின் மீதான அபிப்ராயங்களைச் சொல்லலாம். இதெல்லாம் குப்பை என்கிற மாதிரி சொல்லக்கூடாது. 1993 பிப்ரவரியிலிருந்து மே வரை ஒரு வினோத மனநிலையிலிருந்தேன். அது மிகவும் பிரகாசமான நிலை. அந்த மனநிலையில் எழுதப்பட்டதுதான் ‘டேபிள் டென்னிஸ்'. அது ஒரு பறத்தல் போன்ற உணர்வு. அந்தப் பறத்தல் மனநிலையில் அறிவு பாதிக்கப்பட்டுவிடவில்லை. எம்.ஏ. நான்கு பேப்பர் பரிட்சை எழுதி மூன்றில் தேர்ச்சி பெற்றேன். வேறு எந்தப் படைப்பையும் பாதிப்பான மனநிலையில் எழுதியதில்லை.

என் எண்ணங்களை, அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகத்தான் எழுதுகிறேன். எனக்கு வாழ்க்கை இம்மாதிரி அமைந்திருக்கிறது. உங்களுக்கு எப்படி... என்பது போலத்தான். என் சில கதைகளில் அக்கிரமங்களையும் முறைகேடுகளையும் வெளிப்படுத்தியிருக்கிறேன்.

உதாரணமாக உளவியல் துறை, சமூகப்பணித் துறை போன்ற தொண்டு நிறுவனங்களில் நடக்கும் மோசடிகளை எழுதியிருக்கிறேன். மனநிலை மாறுபாடு என்றால் என்ன என்று மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்காக 59 மனநோயாளிகளைப் பேட்டி எடுத்து ‘உள்ளேயிருந்து சில குரல்கள்' எனும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டேன்.

நான் வாசித்த எதிர் உளவியல் தொடர்பான எட்டு புத்தகங்களிலிருந்து முக்கியமான சில விஷயங்களை அதில் ‘சில செய்திகள் சில சிந்தனைகள்' எனும் தலைப்பில் எழுதியிருக்கிறேன். முஸ்லீம் ஹஸ்ரத்துகள், மலையாள மாந்திரீகர்கள், இந்து சுவாமிஜிகள், பாதிரியார்களைச் சந்தித்து பேட்டி எடுத்து மனநோய்க்கான சிகிச்சையாக அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றியும் ‘இன்னும் தொடரும் பழமை' எனும் தலைப்பில் ‘உள்ளேயிருந்து சில குரல்கள்' புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். சென்னையை மையமாக வைத்து எழுதினால் பிரச்சினையாகிவிடும் என்று ஒரு நண்பர் கூறியதால் கோவையை மையமாக வைத்து அந்தப் புத்தகத்தை எழுதினேன்.

இந்தப் புத்தகத்தின் மீதான ஒரு நல்ல மதிப்புரையை பாவண்ணன் தினமணியில் எழுதியிருந்தார்.

இந்தப் புத்தகத்தின் மூலம் சுவாதீன நிலைக்கும் சுவாதீனமில்லாத நிலைக்கும் இடையில் உள்ள மெலிதான இழையை நீங்கள் அறுத்துவிட்டீர்கள் என்றார் யுவன்.

எழுதும்போது மனநிறைவு ஏற்படுகிறது. அப்போது எந்த வேண்டாத சிந்தனையும் வருவதில்லை. முழுமையின் பிடிப்பு ஏற்படுகிறது. ஒரு நல்லுணர்வு அது. இதுவரையில் நான் எழுதியவை எனக்குத் திருப்திகரமாகவே இருக்கின்றன. எனக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அதைப்பற்றி நான் எழுதமாட்டேன். என் பாணியை மாற்றிக் கொள்வதிலும் எனக்கு விருப்பமில்லை. நான் எழுதிய எல்லாக் கதைகளும் (சில கதைகளைத் தவிர) யதார்த்தக் கதைகள்தான். கற்பனையும் நிஜமும் கலந்தவை. ‘கருத்தரங்கில் கணக்கில் கொள்ளப்பட்டவை' என்ற கதை மட்டும்தான் சர்ரியலிஸக் கதை. இது சோதனை முயற்சி. ‘மிகவும் பச்சையான வாழ்க்கை' எனக்கு மிகவும் பிடித்த கதை; ‘காணி நிலம் வேண்டும்' செண்டிமெண்ட் கதை. எனக்கு ஆதவன் கதைகள் மிகவும் பிடித்திருக்கிறது. ஒரு விஷயத்தை பல கோணங்களில் பார்க்க அவரால் முடிகிறது. நகுலன், சுந்தர ராமசாமியையும் பிடிக்கும்.

என் கதைகளில் ஒரே ஆள் எல்லாக் கதைகளிலும் தொடர்ந்து வருவது விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது. எனக்கு வாழ்க்கையே முக்கிய பிரச்சனையாக இருப்பதால் படிக்கும் உந்துதல் குறைவாகவே உள்ளது. நண்பர்களிடமிருந்து புத்தகங்கள் இரவல் பெற்றே படிப்பேன். என் சேகரிப்பில் ஏற்கனவே ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.

கோணங்கியின் கதையில் உள்ள ஓட்டம் எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் புரியவிலை. அந்த ஓட்டம் தடைப்படாமல் நீண்டு கொண்டே போகும். ஒரு கதை முடிந்த பிறகும்கூட அதை இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் என்று தோன்றும்.

சுந்தர ராமசாமி தங்கு தடையற்று நன்றாகப் பேசக்கூடியவர். அது பெரிய பலம் அவருக்கு.

சாமர்செட் மாம், ஆல்டஸ் ஹக்ஸ்லெ என் விருப்பத்திற்குரியவர்கள். சாமர்செட் மாமின் 35 புத்தகங்கள் படித்திருக்கிறேன். எரிக்க யாங், பேர்ல் எஸ் பக், மேரி கோரல்லி, ஏர்ல் ஸ்டான்லி கார்ட்னர், தாஸ்தாயெவெஸ்கி, மார்க்குவெஸ் ஆகியவர்கள் என் மனதிற்கு நெருக்கமானவர்கள்.

நான் இலக்கியத்திற்கு இதுவரை எந்தப் பரிசும் பெற்றதில்லை. பிரசுரிக்கத் தகுந்தவை என்றளவில் கணையாழில் குறுநாவல்கள் பிரசுரமாயின. இதுவரை மூன்றே மூன்று தடவைகள் இலக்கியவாதியாக இருப்பதற்காகக் கௌரவிக்கப்பட்டிருக்கிறேன்.

1. நண்பர் வே.மு. பொதியவெற்பன் அவர்கள் தன் பொன்விழாவில் ‘பொதிகை' பொன்விழா மலரை என்னை வெளியிடச் சொன்னார். நானும் இதற்கென்றே குடந்தை சென்றிருந்தேன். இது 30.4.2000 அன்று நிகழ்ந்த நிகழ்ச்சி. மிகவும் மனநெகிழ்வு தந்த ஒன்று.

2. திருப்பூர் தமிழ்ச் சங்கம் 20.1.2002 அன்று எனக்கு நன்கொடையாக ரூ 4000 கொடுத்தது.

3. National Folklore Support Centre நடத்திய விழாவில் 9.3.2002 அன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் நான் ஒரு எழுத்தாளர் என்ற முறையில் கௌரவிக்கப் பட்டேன். இது எம்.டி.எம். எனக்குச் செய்த மறக்கவியலாத சிறப்பு.

இலக்கியக் கூட்டங்களுக்கு நான் அதிகம் போவதில்லை.

தத்துவங்களை எழுதுவதற்கு கவிதை, சிறுகதை, நாவல் வடிவம் தேவையில்லை. அதற்கு ஏராளமான தத்துவப் புத்தகங்கள் உள்ளன. அவற்றை நேரடியாகவே படித்து விடலாம். Will Durant எழுதிய தி ஸ்டோரி ஆஃப் ஃபிலாசஃபி எனும் புத்தகம் மேற்கத்திய தத்துவங்கள் எல்லாவற்றையும் சொல்கிறது.

சுதந்திரக் கலாச்சாரம்தான் பிரதானமென்று தோன்றுகிறது. அவரவர் உணர்வுகளுக்கு அவரவர் நேர்மையாக இருக்க வேண்டும். எனக்குத் திருமணத்தில் நம்பிக்கையில்லை என்பதை திருமணத்திற்குப் பிறகுதான் உணர்ந்தேன். ஆணும் பெண்ணும் தங்களுக்குள் உறவு வைத்துக்கொள்ளத் தீர்மானித்தால் சமூக பாதிப்புகளைப் பற்றிக் கவலைப்படக்கூடாது. அது பாதுகாப்பான உறவாக இருந்தால் சரி. ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்பினால் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழலாம், அந்த உணர்வு இருக்கும்வரை. இதே உரிமை பெண்ணுக்கும் உண்டு. ஒரு மனிதன் 60 வயதுவரை வாழ்கிறான் என்றால் நான்கு பெண்களுடனாவது சேர்ந்து வாழ வாய்ப்புண்டு. இதைத்தான் சுதந்திரக் கலாச்சாரம் என்று சொல்கிறேன். கற்பு எப்படிப் புரிந்து கொள்வது என்றே எனக்குத் தெரியவில்லை. அது தேவையற்றது. திருமணத்தை மீறிய உறவுகள் இருக்கத்தானே செய்கின்றன!

பெண் தான் விரும்புகிறபடி உறவு வைத்துக்கொள்ளக் கூடிய பாலியல் சுதந்திரம் வேண்டும். பாலியல் சுதந்திரம் மிகவும் அவசியமானது. 9ம் வகுப்பிலிருந்தே பாலியல் கல்வியைப் புகுத்த வேண்டும்.

சக மனிதனை விரோதியாகக் கருதுவது மிககொடூரமான விஷயம். தனக்கும் சக மனிதனுக்குமான சமூக இடைவெளிதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம். அலுவலகங்களில் ஊழியரென்றும் அதிகாரி என்றும் வேறுபாடு இருக்கக்கூடாது. அப்போதுதான் சுமுகமாக இருக்கும். இந்திய நிலையை முதலாளிகள் புரிந்துகொள்ளவில்லையென்று தெரிகிறது. உதாரணமாக சரியான நேரத்திற்கு ஊழியர் ஒருவர் அலுவலகத்திற்கு வரவேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். இது நிச்சயம் நடைமுறையில் பலன் தராது. பஸ் சீக்கிரம் வராது. சில வேளைகளில் பஸ்ஸே இருக்காது. குளிப்பதற்கு பாத்ரூம் கிடைக்காது. இது போன்ற காரணங்களால்தான் மிகவும் தாமதமாகிவிடும். இந்த விஷயம் நிறைய சிக்கல்களுக்குக் கொண்டுபோகும். இதையெல்லாம் கடந்து அலுவலகம் சென்றடைந்த ஊழியரை ‘ஏன் தாமதம்' என்று அதிகாரி கூச்சல் போட்டால் ஊழியர் அப்செட் ஆகிவிடுகிறார். அவரால் அன்று முழுதும் சரியாக வேலை செய்ய இயலாதபடியாகிறது. இதனால் அலுவலகத்திற்குத்தான் நஷ்டம். இதை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். இதை ஒரு உதாரணமாகச் சொன்னேன். இதைப்போன்று அனேக விஷயங்கள் உண்டு. இந்த நடவடிக்கைகளால் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

இதுவரை 17 நிறுவனங்களில் பணிபுரிந்திருக்கிறேன். பணி அனுபவத்தில் நான் மூன்று நல்ல உயர் அதிகாரிகளைத்தான் பார்த்திருக்கிறேன்.

1. A S Kalyanaraman, Sr. Field Manager, IMRB
2. Cre-A: S. Ramakrishnan
3. Dr M Saradha Menon

எழுதுகிற எழுத்தை எழுத்தாளன் வாழ்ந்து காட்ட வேண்டும். அதுதான் உண்மையான எழுத்து. அப்போதுதான் அதில் நேர்மை இருக்கும். எழுத்தை மிக உணர்ந்துதான் எழுதுகிறோம். ஆகையால் அந்த உணர்வோடு வாழ்க்கை சம்பந்தப்பட்டிருக்கிறது.

என் மனைவி என் கதைகளைப் படிக்க மாட்டாள். அவளுக்கு இலக்கியப் பழக்கம் குறைவு. பக்கத்திலிருக்கும் சிவன் கோயிலில் கதா காலட்சேபம் நடந்தால் போவாள். சுகி சுப்பிரமணியம் பேச்சிலும் அவளுக்கு ஈடுபாடு உண்டு.

நான் தனியன். எந்த அமைப்பையும் குழுவையும் சார்ந்து இயங்குபவன் அல்ல.

நிறுவனங்களில் வேலை பார்ப்பது இதுவரை சிக்கலாகவே இருந்திருக்கிறது. இதனால் நான் ஒரு எதிர் நிறுவன ஆளுமை என்று என்னைப் பற்றி நினைக்கிறேன். இதைப்பற்றி ‘தூயோன்' தொகுப்பில் ‘பரிணாமம்' என்ற கதையில் சொல்லியிருக்கிறேன். அனேக சிரமங்கள் இருந்தாலும் மன நிறைவான தருணங்களும் உண்டு. நண்பர்களாலும் தோழியராலும் நிறைந்தது என் வாழ்க்கை.

வாழ்க்கை ஒரே விதமாக உள்ளது. அதை எப்படி மாற்றவேண்டுமென்று தெரியவில்லை.

ஒன்பது மாதம் முன்பு, தொடர்ந்து மூன்று வாரங்கள் சுய நினைவில்லாமல் இயங்கிக் கொண்டிருந்திருக்கிறேன். டாக்டர் சாரதா மேனன் ‘மூன்று வாரங்கள் உங்கள் மெமரி இரேஸ் ஆகியிருந்தது' என்றார்கள். இது எப்படி நடந்தது, என்ன காரணமென்று தெரியவில்லை.

தற்சமயம் சில மொழிபெயர்ப்பு வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறேன். இப்போது உடனடித்தேவை - ஒரு வேலை.

(மழை ஜூலை 2002ல் வெளியானது)

=========================================

எஸ்.ராமகிருஷ்ணன் கோபி கிருஷ்ணன் : வலி தரும் பரிகாசம் ::

இலக்கியச் சிந்தனை 1986ம் ஆண்டு சிறந்த சிறுகதை ஒன்றைத் தேர்வு செய்யும்படியாக கோபி கிருஷ்ணனைக் கேட்டுக்கொண்டபோது அவர் எனது சிறுகதையான தெருவின் சுபாவத்தைத் தேர்வு செய்திருந்தார். அந்தக் கதையைப் பற்றி தபால் கார்டு ஒன்றில் பாராட்டுக் கடிதம் ஒன்றும் எனக்கு எழுதியிருந்தார். அப்படித்தான் கோபி கிருஷ்ணனுக்கும் எனக்குமான உறவு துவங்கியது.

அதன் முன்னதாக கோபியின் கதையொன்றை கணையாழியில் வாசித்திருக்கிறேன். அவரது குறு நாவல் ஒன்றும் என்னுடைய குறுநாவல் ஒன்றோடு தி.ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் தேர்வாகியிருந்தது. கோபியின் குறுநாவலை வாசித்தபோது அதன் பரிகாசமான குரலும், அன்றாட வாழ்வை அவர் காணும் விதமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் யார் கோபிகிருஷ்ணன், எங்கேயிருக்கிறார் என்று நான் அதிகம் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை.

பின்னர் இனி இதழில் புயல் என்றொரு கோபியின் கதை வெளியாகியிருந்தது. அந்தக் கதையைப் பலமுறை படித்திருப்பேன். எதிர்பாராத ஒரு மழை நாளைப் பற்றியது கதை. கதையின் மையமாகபுயல் இருந்தபோதும் கதை மத்தியதர வர்க்கக் குடும்பம் ஒன்றில் நிகழ்கிறது. கதையை கோபி எழுதியுள்ள விதம் அற்புதமானது. குரலை உயர்த்தாமல் கதையின் வேகம் அதிகமாகிக்கொண்டே போகும். கதை முடியும்போது கதையின் மையம் புயல் அல்ல நமது அன்றாட வாழ்வின் நிலைகுலைவு என்பது புரியத்துவங்கும்.

அந்தக் கதையை வாசித்த நாளில் இருந்து கோபி கிருஷ்ணனைச் சந்திக்க வேண்டும் என்று ஆசை கொண்டிருந்தேன். அவர் சென்னையில் வசிக்கிறார் என்ற விபரத்தைத் தவிர வேறு எதையும் அப்போது அறிந்துகொள்ள முடியவில்லை. பிறகு அவரது ஒவ்வாத உணர்வுகள் சிறுகதைத் தொகுப்பு வெளியானது. அதிலிருந்த கதைகளும் எனக்குப் பிடித்திருந்தன.

கோபி கிருஷ்ணனின் கதைகள் நகரவாழ்வின் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் மனிதர்களைப் பற்றியவை. குறிப்பாக வாழ்விடத்தில் அவர்கள் கொள்ளும் சிக்கல்கள், பிரச்சினைகள் அதன் ஊடாக வெளிப்படும் அதீத மனவோட்டங்கள் இவை அவரது கதைகளின் அடிநாதம். கோபி கதைகளை மிகச் சிறியதாகவே எழுதக்கூடியவர். நான்கு பக்க அளவிற்குள் பெரும்பான்மைக் கதைகள் முடிந்துவிடுகின்றன. ஆனால் இந்தக் கதைகள் நம்மைச் சுற்றிய சமூகவாழ்வைப் பிரதிபலிக்கக்கூடியவை. சினிமா, அரசியல், அதிகாரம், நகரவாழ்வின் வேகம் என்று பெருநகரின் பிரிக்கமுடியாத அம்சங்கள் அவரது கதைகளில் திரும்பத் திரும்ப எழுதப்பட்டுள்ளன.

கோபியின் கதாபாத்திரங்கள் எதிர்பாராத நிலைகுலைவைச் சந்திப்பவர்கள். அல்லது ஏதோவொரு குற்றபோதத்திற்குத் தன்னை ஒப்புக் கொடுத்துக்கொண்டவர்கள். எல்லாப் பிரச்சினைகளுக்குப் பிறகும் உலகின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். மனச்சிதைவு கொண்டவர்கள் என்று அறியப்பட்டு ஒதுக்கப்படுகின்றவர்கள் மீது அவரது பெரும்பான்மை கவனம் குவிகிறது. மனச்சிதைவின் பின்னால் உள்ள காரணங்களும் மனச்சிக்கல்களுக்கு, குடும்பம் என்ற அமைப்பு எவ்வளவு ஆதாரமாக உள்ளது என்பதையும் அவரது கதைகள் விவரிக்கின்றன.

1990களின் துவக்கத்தில் சென்னையில் சுற்றியலைந்த போது ஒருநாள் மதிய நேரத்தில் தி.நகர் கிருஷ்ணவேணி திரையரங்கம் அருகில் தற்செயலாக கோபி கிருஷ்ணன் கடந்து போவதைக் கண்டேன். அது கோபி கிருஷ்ணன்தானா என்று நிச்சயமாகத் தெரியாது. ஆனால் அவரது புகைப்படம் ஒன்றைக் கண்டிருக்கிறேன். ஆகவே அது கோபியாகத்தான் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் பின்னாடியே சென்றேன். அவர் பேருந்து நிலையத்தின் எதிரிலிருந்த டீக்கடையில் நின்று கொண்டு தேநீர் அருந்தினார்.

அருகில் சென்று நீங்கள் கோபி கிருஷ்ணன்தானே என்று கேட்டேன். ஆமாம் என்று தலையசைத்தார். நான் எஸ். ராமகிருஷ்ணன், கணையாழியில் எனது கதை வெளி வந்திருக்கிறது என்றதும் உடனே என் கைகளைப் பற்றிக் கொண்டு உற்சாகமாக நல்லா எழுதிட்டு வர்றீங்க நான் உங்க சிறுகதையை இலக்கியச் சிந்தனைக்காகத் தேர்ந்தெடுத்தேன். ஞாபகமிருக்கா என்று கேட்டார். பின்னர் இருவருமாகத் தேநீர் குடித்துவிட்டு அங்கேயே பேசிக் கொண்டிருந்தோம். பேருந்தின் இரைச்சல்களை மீறி எங்கள் பேச்சு தொடர்ந்தது.

கோபியின் பார்வை இடையிடையே என் பேச்சைக் கடந்து அருகில் இருந்த கடையின் ஓரமாக உட்கார்ந்திருந்த ஒரு மனிதன் மீது குவிந்து இருந்தது. அந்த மனிதன் கசக்கி எறியப்பட்ட காகிதம் ஒன்றைக் கிழித்து வீசியபடியே உட்கார்ந்திருந்தான். அவன் தலை செம்பட்டை படிந்து பற்கள் காவியேறிப் போயிருந்தன. அழுக்கேறிய பேண்டும் சட்டையும் போட்டிருந்தான். அவனது வலது கையில் பெரிய தழும்பு தெரிந்தது. வயது நாற்பதைக் கடந்திருக்கும். முகத்தில் இறுக்கம் படிந்து போயிருந்தது. தன் கைகளை வேகமாகக் காற்றில் வீசி அவன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான்.

கோபி அவனை கையைக் காட்டி அவன் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறான் பாருங்கள் என்று சொன்னார். இருவருமாக அவனைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அவன் செய்கைகள் ஒருபோதும் ஒன்றாக இருப்பதில்லை, அதில் ஒவ்வொரு முறையும் புதிதாக ஒருவிதம் உருவாகிறது. அவன் மிக உற்சாகமாக இருக்கிறான் என்று சொல்லியபடியே பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர் தான் புகை பிடிக்கலாமா என்று என்னிடம் கேட்டார். நடந்து சென்று சிகரெட் வாங்கிக்கொண்டு வந்து பற்றவைத்த படியே திரும்பவும் அந்த மனிதனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பிறகு என்னிடம் நீங்கள் முன்றிலுக்கு வந்தீர்களா என்று கேட்டார். ஆமாம் என்றதும் அருகில் ஆத்மன் ஆலோசனை மையம் என்ற ஒன்றை, தானும் நண்பர் சபியும் சேர்ந்து திறந்திருப்பதாகவும் அதற்காகத் தான் மாலை வேளைகளில் அங்கே வந்து போவதாகவும் அந்த மையம் புகை மற்றும் மதுப் பழக்கங்களில் இருந்து மீண்டுவர நினைப்பவர்களுக்கான ஆலோசனையைத் தருகிறது என்றார். நான் தலையசைத்துக்கொண்டேன். பிறகு அவராகவே அந்தப் பழக்கங்கள் என்னிடமே இருக்கிறது. ஆனாலும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. அதை மீறிச் செல்லும்போதுதான் ஆலோசனைகள் தேவை. தன்னால் அதை ஒரு மருத்துவச் சேவையாக எடுத்துச் சொல்லவும் மாற்றவும் முடியும் என்று சொல்லிவிட்டு சிரித்தார்.

கோபி கிருஷ்ணனின் சிரிப்பு மிக அலாதியானது. இயல்பாகவும் அடக்க முடியாததாகவும் சில வேளைகளில் வெளிப்படும். கோபி எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடியவர் என்பதை அருகில் இருந்து சில முறைகள் கண்டிருக்கிறேன். முதல் சந்திப்பிலே என்னிடம் கோபி, உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டார். எதற்காகக் கேட்கிறீர்கள் என்று கேட்டேன்.

இல்லை தஸ்தாயெவ்ஸ்கியிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். “My friends, God is necessary to me, because he is the only being that I can love eternally.” என்ற அவரது பதில் குழப்பமாக இருக்கிறது, திடீரென அது நினைவிற்கு வந்தது. எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் நிறைய நேரங்களில் கடவுள் இருந்தால் நன்றாக இருக்கக்கூடும் என்றும் தோன்றுகிறது என்றபடியே நீங்கள் தஸ்தாயெவ்ஸ்கியைப் படித்திருக்கிறீர்களா என்று கேட்டார்.

இருவரும் அந்தத் தேநீர்க்கடையில் இன்னொரு தேநீர் குடித்தபடியே தஸ்தாயெவ்ஸ்கி பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். தனக்கு தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளை ரொம்பவும் பிடிக்கும். குறிப்பாக இடியட் என்னும் நூலைப் பலமுறை வாசித்திருப்பதாகச் சொல்லியபடியே குற்றமும் தண்டனையும் நாவலில் இடம்பெற்றுள்ளதாக Talking nonsense is man's only privilege that distinguishes him from all other organisms என்ற வரியைச் சொல்லியபடியே இது மிக நன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது என்று அவராகச் சிரித்துக்கொண்டார்.

இருவருமாகப் படியேறி ஆத்மன் ஆலோசனை மையமிருந்த வளாகத்திற்குள் சென்றோம். நான் முன்றில் புத்தகக் கடைக்கும் அவர் ஆலோசனை மையத்திற்குள்ளமாகப் பிரிந்துவிட்டோம். முன்றில் கடையில் இருந்த எழுத்தாளர் மா. அரங்கநாதன் அவர்கள் கோபி உங்க கூட வந்த மாதிரி இருந்தது. இருக்கானா என்று கேட்டார். ஆமாம் என்றதும் அவர் தன்னிடம் படிக்கக் கேட்டதாகச் சொல்லி ஒரு புத்தகத்தை எடுத்துக் காட்டினார். அது டி.ஹெச்.லாரன்ஸின் யீஷீஜ் என்ற புத்தகம். சில நிமிசங்களுக்குப் பிறகு கோபி வந்து அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொண்டு சென்றார்.

அரைமணி நேரத்திற்கு ஒருமுறை புகைபிடிப்பதற்காக கோபி முன்றிலைக் கடந்து அருகில் இருந்த வெற்று வெளிக்குச் செல்வார். அப்போது குனிந்த தலையோடு மிக மெதுவாகவே கடந்து செல்வார். தனியே புகைபிடித்துவிட்டு வேகமாகக் கடந்து போய்விடுவார்.

ஆத்மன் ஆலோசனை மையத்திற்கு யார் வருகிறார்கள் என்று தெரிந்துகொள்ள நான் ஆவல் கொண்டதில்லை. ஆனால் அங்கே வரும் கோபி கிருஷ்ணனோடு பல நாட்கள் பேசிக்கொண்டிருந்திருக்கிறேன்.

ஒரு முறை அவர் சூளைமேட்டுப் பகுதியில் ஒரு வெள்ளைக்காரருடன் பேசிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்ததைக் கண்டேன். அந்தப் பக்கமிருந்த பொன்விஜயன் அச்சகத்தில் கல்குதிரை ஓடிக் கொண்டிருந்தது. ஆகவே அதைப் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது எதிரே வந்தார் கோபி. வெள்ளைக்காரனை எனக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டு மூவருமாகத் தேநீர் அருந்தச் சென்றோம். அவர் பேசிய மிக அழகான ஆங்கிலம் என்னை வியப்பூட்டியது.

அதன் மறுநாள் பேருந்தில் இருவரையும் மறுபடி பார்த்தேன். அந்த வெள்ளைக்காரன் ஒரு அமெரிக்கன் என்று சொல்லி ஆய்வுப் பணிக்காக வந்திருக்கிறான் என்றார். அவருக்கு நிறைய வெளிநாட்டு நண்பர்கள் இருந்தார்கள்.

கோபி அவ்வப்போது சிறுகதைகள் எழுதக்கூடியவர். தனது கதைகளைப் பற்றி அவர் அதிகம் பேசிக் கொண்டதில்லை. கதைகள் நன்றாக உள்ளது என்று பாராட்டும்போது கூட அவர் சிரித்துக்கொள்வார். அதுபோலவே வேறு எந்த எழுத்தாளரையும் பற்றி அவர் கடுமையாகப் பேசியது கிடையாது. கோணங்கியின் ‘பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம்’ கதையைப் படித்து விட்டு மிக நன்றாக வந்திருக்கிறது. அதுபோல தானும் ஒரு கதையை எழுதிப் பார்த்ததாகச் சொன்னார். தன்னைப் பற்றியோ தனது மன உளைச்சல்கள் பற்றியோ அவர் அதிகம் சொல்லியதில்லை.

ஒரு முறை அவரைத் தற்செயலாக அம்பத்தூர்ப் பகுதியில் பார்த்தேன். தன் வீடு அருகில்தான் இருக்கிறது என்று சொல்லி அழைத்துச் சென்றார். மிகச் சிறிய குடியிருப்பு. எளிமையான குடும்பம். தன் மனைவியைத் தான் காதலிப்பதாகவும் மனைவியைக் காதலிப்பதில் ஒரு சௌகரியமிருக்கிறது, அதற்கு அதிகம் செலவு செய்யத் தேவையில்லை என்றும் சொல்லிச் சிரித்தார்.

அவரது கதைகளில் அவரது வசிப்பிடமும் அதன் நெருக்கடியும் அதிகமாகப் பதிவாகியிருக்கின்றன. அப்படிப் பதிவான கதைகளில் ஒன்றில் அண்டை வீட்டுக்காரன் ஒருவனின் காயப்போட்ட ஜட்டி ஒன்று காணாமல் போய்விடுகிறது. உடனே அந்தக் குடித்தனத்தில் இருந்த ஆண்கள் அத்தனை பேரையும் ஜட்டியைக் காட்டச் சொல்லி அந்த நபரின் மனைவி வலம் வருவாள். இந்த சம்பவம் உண்மையில் நடந்ததா என்று கோபியிடம் கேட்டேன்.

அவர் சிரித்தபடியே அந்தப் பெண்மணி முரட்டுத்தனமானவள். தன் கணவனின் ஜட்டியை எடுத்தவர்கள் திருப்பிக் கொடுக்காவிட்டால் அப்படி நடந்து கொள்ளப் போவதாக உரத்துக் கத்திக் கொண்டிருப்பதைக் கேட்டேன். உள்ளுக்குள் ஒரே நேரத்தில் அப்படி நடந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆவலும், அதே நேரம் அவமதிப்பாகிவிடுமே என்ற உணர்ச்சியும் ஒன்றாகத் தோன்றியது. வீட்டில் இருக்கவே முடியவில்லை. அவளுக்கு பயந்து வீட்டிற்குப் போகாமல் இரவு வரை வெளியே சுற்றிக் கொண்டிருந்தேன் என்றார்.

கோபி மதுரையில் பிறந்தவர். தன் பால்ய வயதில் கண்ட மதுரையைப் பற்றிய நினைவுகள் அதிகம் அவருக்குள் இருந்தன. அதை எழுத வேண்டும் என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். கடைசி வரை எழுதவேயில்லை.

உளவியல், சமூக சேவை இரண்டிலும் அவர் முதுகலைப் பட்டம் பெற்றவர். சென்னையில் உள்ள பிரபலமான சில உளவியல் மையங்களில் பணிபுரிந்திருக்கிறார். சிகிட்சை மையங்களில் செயல்படும் அதிகாரமும் நோயாளிகளிடம் அவர்கள் நடந்துகொள்ளும் முறையும் அவரை இணைந்து செயல்படவிடாமல் தடுத்திருக்கிறது.

தான் வேலை செய்த இடம் ஒன்றில் கையூட்டு அதிகம் நடை பெறுகிறது என்று சொல்லி வேலையை விட்டதாகச் சொன்னார். இன்னொரு அலுவலகத்தில் வெளிநாட்டுப் பணத்தை வாங்கி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று குற்றம் சொன்னதால் வேலையை விடும்படி ஆனது என்றும் அப்படி வேலை நீக்க உத்தரவு தந்த போது, தான் அந்த உத்தரவில் நாலைந்து ஆங்கிலச் சொற்கள் தவறாகப் பிரயோகப்படுத்தப்பட்டிருப்பதோடு எழுத்துப் பிழையும் இலக்கணப் பிழையும் இருப்பதைக் கண்டு பிடித்து உயரதிகாரிக்குத் தெரிவித்தபோது அவர் மிகுந்த ஆத்திரத்துடன் கோபப்பட்டுத் துரத்தியதாகவும் பரிகாசத்துடன் சொன்னார்.

ஒரு மனிதன் தனக்கு வேலை பறிபோன விஷயத்தைக்கூட இப்படிப் பரிகாசமும் எள்ளலுமாகச் சொல்ல முடியுமா என்று தோணியது. வாழ்க்கை நெருக்கடி அவரை தினசரி படுத்தி எடுத்தபோது அவரிடமிருந்த எள்ளல் மற்றும் இயல்பான நகைச்சுவை உணர்வு குறையவேயில்லை. அவரது மனைவி ஒரு அச்சகத்தில் பணியாற்றுகிறார் என்றும் அங்கே வேலை கடினம் என்றும் அவராகச் சில வேளைகளில் சொல்லியிருக்கிறார். அபூர்வமாகத் தன் மகளைப் பற்றி உணர்ச்சி பூர்வமான நெகிழ்வுடன் பேசுவார்.

கோபியின் கதைகள் மனித அவலங்களை, கீழான செயல்களை, ஒடுக்கப்படும் உணர்வுகளை, மறுக்கப்படும் பாலியலை, அடங்க மறுக்கும் மனச்சிதைவுகளைப் பேசுகின்றவை. அந்த வகையில் அவரது எழுத்திற்கான முன்னோடியாக நகுலனைக் குறிப்பிடலாம். ஆனால் நகுலனிடம் உள்ள தத்துவ சார்பு கோபியிடம் இல்லை. அது போலவே கோபியிடம் உள்ள அன்றாட உலகமும் அதன் மீதான எள்ளலான விமர்சனமும் நகுலனிடம் கிடையாது. இருவருமே தஸ்தாயெவ்ஸ்கியைக் கொண்டாடுபவர்கள்.

தன் சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்வதற்காக எந்த வேலையும் செய்வதற்கு அவர் தயராக இருந்தார். சில மாதங்கள் அவர் நக்கீரன் பத்திரிகையில் பிழை திருத்துபவராக வேலை செய்தார். சில மாதங்கள் ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் வேலை செய்தார். கொஞ்ச நாட்கள் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார்.

சென்னையில் அம்பலம் என்றொரு அமைப்பின் கலை இலக்கியப் பணிகளை நான் சில மாதங்கள் ஒருங்கிணைப்புச் செய்து கொண்டிருந்தேன். அவர்கள் தங்களது நிகழ்ச்சி குறித்த பதிவுகளைத் தமிழ் ஆங்கிலம் இரண்டிலுமாக வெளியிடுவார்கள். இதற்கான மொழிபெயர்ப்பு வேலையை கோபி கிருஷ்ணனிடம் ஒப்படைத்திருந்தேன்.

அடிக்கடி என்னைப் பார்க்க திருவான்மியூர் வருவார். பேருந்தில் பயணம் செய்து வந்து இறங்கி நடந்து சீனிவாசபுரத்திலிருந்த அம்பலம் அலுவலகத்தில் தன் மொழியாக்கத்தைத் தந்துவிட்டு அதற்கான சொற்ப ஊதியத்தை வாங்கிக்கொண்டு போவார். அப்போது சில மணிநேரங்கள் எங்காவது நடந்து சென்று மனதில் பட்டதைப் பேசிக்கொண்டிருப்போம்

திருநெல்வேலியில் உள்ள சேவியர் கல்லூரியில் நடைபெற்ற நாட்டுப்புறவியல் கருத்தரங்கம் ஒன்றில் வாசிக்கப்படும் கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய கோபி கிருஷ்ணன் நெல்லை வந்திருந்தார். அந்த நிகழ்வில் நானும் கலந்துகொண்டிருந்தேன். அதனால் அவர் அறையும் என்னுடைய அறையும் அருகாமையில் இருந்தன.

ஒரு நாள் இரவு அவர் தனக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் சில மருந்துகள் தேவைப்படுகின்றன. தன்னோடு பாளையங்கோட்டை வரை வரமுடியுமா என்று கேட்டார். இருவருமாகக் கிளம்பி பாளையங்கோட்டை வரை சென்றோம். அவர் கேட்ட மருந்தை கடைக்காரர் இல்லை என்று சொன்னதால் வேறு ஒரு மருந்தை கோபி கேட்டார்.

மருந்துச் சீட்டு இல்லாமல் அதைத் தன்னால் தர இயலாது என்று கடைக்காரர் சொன்னதும் தனக்கு அந்த மருந்து கிடைக்காவிட்டால் நிச்சயம் உறங்க இயலாது எப்படியாவது கொடுக்கும்படியாகக் கெஞ்சும் குரலில் கேட்டார். கடைக்காரர் மறுத்துவிடவே அங்கிருந்த ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினார். அது தூக்க மாத்திரை என்றும் அதன் அளவு முன்பு தான் சாப்பிடுவதைவிடவும் தற்போது அதிகமாகி உள்ளதாகவும் அதற்கான மருந்துச் சீட்டை, தான் எடுத்துவரவில்லை என்பதால் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாகத் தடுமாற்றத்துடன் சொன்னார்.

அப்போது நெல்லையில் இருந்த லேனாகுமார் மருத்துவத்துறை தொடர்பானவர் என்பதால் அவரை அழைத்து விபரம் சொன்னதும் அவர் எங்கிருந்தோ அந்த மாத்திரைகளை வாங்கி வந்து தந்து இந்த அளவு தூக்கமாத்திரையா சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டதும், கோபி அது தனக்குப் பழகிப்போய் விட்டது, இதைப் போட்டால் கூட பின்னிரவில் எழுந்துவிடுவேன். பிறகு விடியும் வரை விழித்தபடியே இருக்க வேண்டியதுதான் என்று அதே சிரிப்போடு சொன்னார்.

அப்போது அவரது கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. அதை மறைக்க அவர் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டார். பின்னர் அறைக்குத் திரும்பிய சில நிமிசங்களில் அவர் மாத்திரையைப் போட்டுக்கொண்டு படுத்துக் கொண்டார். ஆனால் அவருக்கு உறக்கம் வரவில்லை பாதித் தூக்கமும் விழிப்புமாக அவர் வராந்தாவில் நடந்து கொண்டிருந்தார். என் அறைக்கு வந்து தண்ணீர் இருக்கிறதா என்று கேட்டார். டம்ளரில் தந்தபோது அப்படியே பிளாஸ்டிக் ஜக்கை எடுத்துக் கடகடவெனக் குடித்தார்.

அன்றிரவு அவரால் இயல்பாக உறங்கமுடியவில்லை என்றதும் திரும்பவும் குமாரை அழைத்துச் சொன்னதால் மாற்று மருந்து ஒன்றை வாங்கி வந்து சாப்பிடச் சொன்னார். விடிகாலை வரை இந்த அவஸ்தையில் இருந்த கோபி உறங்கி, காலை ஒன்பது மணி அளவில் கண்விழித்து குளித்துவிட்டு வழக்கம் போலக் கருத்தரங்கில் கலந்து கொண்டு தன் மொழியாக்க வேலையைச் செய்யத் துவங்கினார்.

அசதியும் சோர்வும் அவரது முகத்தில் பீடித்திருந்தன. சாப்பாட்டை வெகுவாகக் குறைத்திருந்தார். சிகரெட் மற்றும் தேநீர்தான் அவரது பிரதான உணவாக இருந்தன. அவரது உடல் நலத்திற்கு என்ன பிரச்சினை. ஏன் இப்படி தன்னை வருத்திக்கொண்டு வேலை செய்கிறார் என்று வருத்தமாக இருந்தது. அவர் தொடர்ந்து மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார் என்பதும் அப்படியிருந்தும் நோய்மை கட்டுக்குள் அடங்கவில்லை என்பதும் நேரடியாகப் புரிந்தது.

அதன் பிறகு சில மாதங்கள் நான் கோபியைச் சந்திக்கவில்லை. ஒரேயொரு முறை இலக்கியக் கூட்டமொன்றில் சந்தித்துப் பேசிக்கொண்டோம். கோபி ரொம்பவும் தளர்ந்து போயிருந்தார். பிறகு அவரது புத்தகம் வெளியான சமயத்தில் தற்செயலாக நண்பர் ராஜன்குறையின் வீட்டில் சந்தித்துக்கொண்டு உரையாடினோம். கோபியின் அன்றாட வாழ்வு மிக நெருக்கடியாக உள்ளது என்று பலமுறை நண்பர் வெளிரங்கராஜன் சொல்லியிருக்கிறார். ஆனால் கோபி இதை எவரிடமும் சொல்லிக்கொண்டது கிடையாது. ஒருமுறை அவர் பொங்கல் வாழ்த்து அட்டைகள் அனுப்பி வைத்திருந்தார்.

அட்சரம் இதழுக்காக அவரிடமிருந்து பிராய்டு பற்றிய கட்டுரை ஒன்றைக் கேட்டேன். தன்னால் முடிந்தால் எழுதித் தருவதாகச் சொன்னார். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அதைத் தன்னால் எழுத முடியவில்லை என்பதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்வார்.

கோபியின் கதைகள் மனித வலிகளை மிக ஆழமாகப் பதிவு செய்திருக்கின்றன. குறிப்பாக சகமனித துவேசங்கள் அவமதிப்புகள் அதிகாரத்தின் பெயரால் நடைபெறும் கீழ்மைகள், பாலியல் வேஷங்கள், சமூக வாழ்வில் காணப்படும் இரட்டைத்தன்மை. வெகுமக்களின் ரசனை சார்ந்த வெளிப்பாடுகள் என்று அவர் நகரவாழ்வின் இருண்ட பகுதியைத் தன் படைப்பில் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார். இன்னொரு பக்கம் மன நலச்சேவைகள். இன்று எந்த அளவு மனிதாபிமானமற்று நடத்தப்படுகின்றன என்பதைப் பற்றியும் கடுமையான எதிர்ப்புக்குரல் கொண்டிருந்தார். இதை வெளிப்படுத்த அவரும் சபியும் இணைந்து சிறிய நூல் ஒன்றை வெளியிட்டார்கள்.

தூயோன், மானுட வாழ்வு தரும் ஆனந்தம் போன்ற அவரது சிறுகதைத் தொகுப்புகளும் உள்ளிருந்து சில குரல்கள் என்ற அவரது நாவலும் குறிப்பிடத்தக்க படைப்புகள். டேபிள்டென்னிஸ் என்ற அவரது குறுநாவல் பாலியல் சிக்கல் குறித்த பகடியை மிக அழகாக வெளிப்படுத்துகிறது.

தன் மகளின் திருமணத்திற்கு கோபி என்னை அழைத்திருந்தார். ஆனால் கலந்து கொள்ளவில்லை. பிறகு தற்செயலாக ரங்கராஜனுடன் சந்தித்தபோது தன் மருமகனைப் பற்றி மிகப் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்தார். அவரது குடும்பச் சூழல் மிகவும் நெருக்கடியாகிவிட்டிருப்பதை அவரது பேச்சின் ஊடாகப் புரிந்துகொள்ள முடிந்தது. புதிதாகத் தான் எழுத விரும்பும் கதை பற்றிப் பேசிக்கொண்டிருந்தது வியப்பாக இருந்தது.

ஒரு கதையை நிம்மதியாக அமர்ந்து எழுதுமளவுகூட வீட்டின் சூழல் இல்லை என்று அவர் சொன்னவிதம் வலி தருவதாக இருந்தது. அன்று லதா ராமகிருஷ்ணனைப் பார்க்கச் செல்வதாகச் சொல்லியபடியே நடந்து செல்லத் துவங்கினார்.

2003ல் கோபி மரணமடைந்த நாளில் நான் விருதுநகரில் இருந்தேன். செய்தி கேள்விப்பட்டவுடன் மனதில் கோபியின் சிரிப்புதான் முதலில் தோன்றியது. கோபியோடு அதிகம் நட்பு கொண்டிருக்கவில்லை என்றபோதும் நான் அறிந்த தமிழ் எழுத்தாளர்களில் கோபி மிகவும் தனித்துவமானவர். அத்தோடு தமிழ்ச் சிறுகதைகளில் அவரது பங்களிப்பு சிறப்பானது. அவரது கதை உலகிற்கு நிகரான பகடியும் ஆழ்ந்த துக்கமும் கொண்ட கதைகள் இன்று வரை வேறு எவராலும் எழுதப்படவில்லை.

தஸ்தாயெவ்ஸ்கியைப் போல வாழ்வின் கருணையற்ற நெருக்கடியை எதிர்கொண்டபடியே திரும்பத் திரும்ப வாழ்வு தரும் ஆனந்தத்தைப் பேசியவர் கோபி கிருஷ்ணன். இன்று வாசிக்கையில் அந்த ஆனந்தமும் பரிகாசமும் தீர்க்க முடியாத வலியை உருவாக்குகிறது என்பதே நிஜம்.

======================

எஸ்.ராமகிருஷ்ணன் கதாவிலாசம் - புகையும் வயிறு! ::

தென் மாவட்டங்களில் பெரும்பான்மை ஊர்களில் பேருந்து நிலையங்கள் ஊருக்கு வெளியே ஏதோ ஓர் இடத்துக்கு இடம் மாற்றப்பட்டுவிட்டன. நள்ளிரவில் பேருந்தை விட்டு இறக்கிவிடப்படும்போது எங்கே இறங்கியிருக்கிறோம் என்று அடையாளமே தெரிவதில்லை. காலங்காலமாக சுவர்பல்லிகளைப் போல பழைய பேருந்து நிலையத்தோடு ஒட்டிக்கிடந்த பேருந்து நிலையவாசிகள் எங்கே போயிருப்பார்கள்?

எம்.ஜி.ஆர்., சிவாஜி முதல் அத்தனை நடிகர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களுடன், அகலமான நெற்றி நிறைய திருநீறும் கையில் ஒரு பெரிய லென்ஸ§மாக உட்கார்ந்திருக்கும் கைரேகை பார்ப்பவரும், ஒரு கை சூம்பிப்போய் பிச்சையெடுக்கும் நடுத்தர வயதுப் பெண்ணும், தனக்குத்தானே பேசியபடி பேருந்து நிலையத்தைச் சுற்றிச்சுற்றி வரும் சித்த சுவாதீனமற்றவனும், வாயில் பிளேடு துண்டை ஒளித்துக்கொண்டு மடித்துவிட்ட சட்டையும் பழுப்பான வேஷ்டியுமாக நிற்கும் பிக்பாக்கெட்காரனும், மூத்திரச் சந்துக்குள் நின்றபடி கஞ்சா பொட்டலம் விற்பவனும், அசைய முடியாத பருத்த இடுப்புடன் டீக்கடை வாசலில் கால்களை அகட்டி உட்கார்ந்து வெற்றிலை எச்சில் துப்பியபடி கொச்சையாக திட்டிக்கொண்டு இருக்கும் வட்டிக்கு விடும் பெண்ணும், நள்ளிரவில்கூட வெள்ளரிக்காய் விற்கும் அந்த பூப்போட்ட பாவாடை அணிந்த சிறுமியும் எங்கே போயிருப்பார்கள்?

உரித்து எறியப்பட்டுவிட்ட வாழைப்பழத்தின் தோலைப் போல அவர்களும் இனி தேவையற்றவர்களாக வீசி எறியப்பட்டிருப்பார்களா? அவர்களுக்கு வீடு இருக்குமா? எப்போது வீடு திரும்புவார்கள்? குழந்தைகள், குடும்பங்கள் எதுவும் அவர்கள் நினைவிலிருக்காதா? எப்போது முதன் முதலாகப் பேருந்து நிலையத்துக்குள் அவர்கள் வந்து சேர்ந்திருப்பார்கள்?

மதுரையிலிருந்து சென்னைக்கு வருவ தற்காக ஆம்னி பஸ்ஸில் ஏறியிருந்தேன். இரவு பத்து மணியாகியும் ஏழு மணிக்குப் புறப்பட வேண்டிய பஸ்ஸை எடுக்கவே இல்லை. டிரைவரும் இரண்டு ஏஜென்ட்களும் சுற்றிச் சுற்றி வந்து ஆள் பிடித்துக்கொண்டு இருந்தார்கள். அப்படியும் பதினைந்து பேருக்கு மேல் ஏறவில்லை. பஸ் புறப்பட்ட நிலையிலே இரண்டு மணி நேர மாக நின்றுகொண்டு இருந்தது.

பேருந்தில் இருந்த ஒருவர், ஆத்திரத்தில் தான் வேறு பஸ்ஸில் போவதாகச் சத்தம் எழுப்பிக்கொண்டு இருந்தார். அவரை ஒரு ஏஜென்ட் சமாதானப்படுத்தி உட்கார வைத்தார். பேருந்து நிலையத் தின் இருள் சந்திலிருந்து பைஜாமா ஜிப்பா அணிந்த பருத்த அறுபது வயதைக் கடந்த ஒருவரும், மெலிந்து வெளிறிய ஊதா நிற சல்வார் கமீஸ் உடையணிந்த பெண்மணியும் ஆளுக்கு இரண்டு பெரிய பைகளைத் தூக்கிக்கொண்டு எங்கே செல்வது என்று தெரியாமல் நடந்து வந்தார்கள்.

வட நாட்டிலிருந்து வந்தவர்கள் என்பது முக ஜாடையிலே தெரிந்தது. ஏஜென்ட்களில் ஒருவன் அவர்களிடம் அரைகுறை இந்தியில் பேசி ஏதோ விசாரித்தான். பிறகு, அவர்களை எங்களது பஸ்ஸில் ஏற்றி ஜன்னலோர மாக உள்ள ஸீட்டில் உட்கார வைத்துவிட்டு, நானூறு ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு கீழே இறங்கினான். பேருந்து கிளம்புவதற்குத் தயாராக இருந்தது. வயதானவர் சற்று சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, பக்கத்து ஸீட்டில் இருந்தவரைப் பார்த்து லேசாகப் புன்னகை செய்தார். பேருந்து புறப்பட்டு சில அடி தூரம் நகர்ந்து திரும்பவும் நின்றது. வயதானவர் அருகில் இருந்த வரிடம், ‘ராமேஸ்வரத்துக்கு அதிகாலை போய்ச் சேர்ந்துவிடுமா?’ என்று கேட்டார். ‘இது ராமேஸ்வரம் போகாது. சென்னை செல்லும் பேருந்து’ என்று சொன்னதும் அவருக்குப் புரியவில்லை. ‘ராமேஸ்வரம் என்று சொல்லித்தானே ஏற்றினார்கள்’ என்று எழுந்து அவசரமாக டிரைவர் அருகே போய் ஆங்கிலத்தில் ஏதோ கேட்டார் பெரியவர். டிரைவரோ, ‘அதை ஏஜென்ட்டிடம் கேளுங்கள்!’ என்றார். இதற்குள் பஸ் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்துவிட்டிருந்தது.

பெரியவர் அவசர அவசரமாகப் பேருந்திலிருந்து கீழே குதித்து, பஸ்ஸின் முன்னால் சாலையில் உட்கார்ந்து கொண்டு விட்டார். அவரது கண்கள் சிவந்திருந்தன. கோபத்திலும் அவர் ஏதோ புலம்பிக்கொண்டு இருந்தார். பேருந்திலிருந்தவர்கள் டிரைவரைத் திட்ட, ‘தனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது. எல்லாம் ஏஜென்ட்டின் வேலை!’ என்று அவர் சாதித்துக்கொண்டு இருந்தார். பெரியவரோ ‘ஏஜென்ட் வராமல் இங்கிருந்து எழுந்து வழிவிட மாட்டேன்!’ என்று பிடிவாதமாக உட்கார்ந்திருந்தார். இதற்குள் இன்னொரு நபரை சென்னைக்கு ஏற்றிவிட ஆட்டோவில் அழைத்துக்கொண்டு ஆம்னியைத் தேடி வந்து சேர்ந்தான் அதே ஏஜென்ட். பெரியவர் அவனைக் கண்டதும் ஆக்ரோஷத்துடன் சண்டையிட்டார். அவனும் சளைக்காமல் ‘ராமேஸ்வரம் போவதற்கு இந்த நேரம் பஸ் இல்லை பெரியவரே! அதான் திருச்சிக்கு போய் மாறுவதற்காக இதில் அனுப்பி வைத்தேன். பணம் வாபஸ் கிடையாது!’ என்று சொன்னான். பயணிகளின் சத்தம் அதிக மாகவே ஏஜென்ட் பஸ்ஸில் ஏறி வயதான பெண்மணியையும் அவர்களது பொருட் களையும் எடுத்துக்கொண்டு கீழே இறங்கும்படி இழுத்தான். அவள் கம்பி யைப் பிடித்துக்கொண்டு வரமறுத்தாள். யாரும் எதிர்பாராதபடி ஏஜென்ட் அவர்கள் வைத்திருந்த ஒரு பையைப் பிடுங்கி ஜன்னல் வழியாக வெளியே போட்டான்.

கைதவறி விழுந்த குழந்தையைப் பிடிக்க முயற்சிப்பவள் போல வயதானவள் பெருங் குரலெடுத்து அழுதபடி பேருந்திலிருந்து இறங்கி பையை எடுக்க ஓடினாள். இதற்குள் வயதானவரும் கலக்கத்துடன் இருட்டில் விழுந்துகிடந்த பையிலிருந்து சிதறிய பொருட்களைத் தேடிக் கொண்டு இருந்தார். ஒரு சிறிய மண் கலயம் ஒன்று உடைந்து சாலையெங்கும் சிதறிக்கிடந்தது. வயதானவள் அந்தக் கலயத்தின் துண்டு களையும், தரையில் கொட்டிக் கிடந்த சாம்பலையும் அள்ளிக்கொண்டு, தலையில் அடித்து அழுதுகொண்டு இருந்தாள். வயதானவரோ கண்ணில் நீர் தளும்ப Ôசெத்துப்போன என் பையன் அஸ்தி சார். கடல்ல கரைக்கறதுக்காக குவாலியர்ல இருந்து ராமேஸ்வரம் கொண்டுபோயிட்டு இருக்கேன்Õ என்று தழுதழுத்த குரலில் சொன்னார். பஸ்ஸில் இருந்த யாவரும் செய்வதறியாமல் பார்த்துக்கொண்டு இருந்தோம். டிரைவர் தன் ஸீட்டை விட்டு இறங்கி வந்து, இருட்டுக்குள் நின்றிருந்த ஏஜென்ட்டின் முகத்தில் ஓங்கி ஓர் அறை அறைந்தார். பிறகு, அவனைத் தரதரவென செத்த எலியை இழுத்துக்கொண்டு செல்வதுபோல அந்த அம்மாவின் காலடியில் இழுத்துப்போட்டு, ‘மன்னிப்புக் கேளுடா!’ என்று இந்தியில் சொன் னார். அவன் தயங்கித் தயங்கி ‘வயித்துப்பாட் டுக்காகச் செஞ்சுட்டேன், என்னை மன்னிச்சிருங்க அம்மா!’ என்றான். அவள் நிமிர்ந்து பார்க்கவேயில்லை. ஏஜென்ட் வந்த ஆட்டோ இருளில் நின்றுகொண்டு இருந்தது. பெரியவர் உடைந்துகிடந்த கலயத்தையும் மண்ணில் விழுந்த சாம்பலையும் அள்ளி ஒரு பிளாஸ்டிக் காகிதத்துக்குள் போட்டுக்கொண்டு இருந்தார். டிரைவர் ஆத்திரத்துடன் ஏஜென்ட்டிடம் ‘இவர்கள் இருவரையும் ஒரு டாக்ஸியில் ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைக்க வேண்டியது உன் பொறுப்பு!’ என்று சொல்லிவிட்டு, தன் பையில் மடித்து வைக்கப்பட்டிருந்த பணத்தை அப்படியே எடுத்து பெரியவரிடம் கொடுத்தார். பிறகு பேருந்து புறப் பட்டது. வயதான பெண்ணும் பெரியவரும் ஏஜென்ட்டுடன் ஆட்டோவில் ஏறிக்கொண்டு ,இருந்தார்கள்.

டிரைவர் பஸ் கிளம்பும் முன்பாக பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டபடி, ‘என்ன சார் செய்றது? நாய் பிழைப்பாப் போச்சு... எப்படி யாவது உங்களை காலையில எட்டு மணிக்குள்ளே மெட்ராஸிலே கொண்டுபோய் சேர்த்துடறேன்!’ என்றபடி பேருந்தை இயக்கினார்.

அடித்தட்டு மக்களின் உலகம் விசித்திரமானது. அதன் போராட்ட மும் இயல்பும் நாம் தீர்மானிக்க முடியாதது. விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி எழுதுவதும் அவர்களின் உலகைப் புரிந்துகொள்வதும் சமகால இலக்கியத்தின் முக்கிய போக்காக உருவாகிக்கொண்டு இருக்கிறது. தமிழில் இது போன்ற எழுத்துக்கு முன்னோடி யாக ஜி.நாகராஜனையும் ஜெயகாந்தனையும் குறிப்பிடலாம். இதன் தொடர்ச்சியாக உருவான நவீன சிறுகதை உலகில் முக்கிய எழுத்தாளர் கோபி கிருஷ்ணன்.

பெருநகர வாழ்க்கை எப்படி மனிதர்களைத் தங்களது இயல்பான உணர்ச்சிகளைக்கூட வெளிப்படுத்த முடியாமல் ஒடுக்கிவிடுகிறது என்பதைப் பற்றியே கோபி கிருஷ்ணனின் கதைகள் பேசுகின்றன. வாழ்வின் அபத்த நிலைகளை எதிர்கொள்ளும் நெருக்கடிகளே அவரது கதையுலகம். கோபி கிருஷ்ணனின் மனிதர்கள் ஒண்டிக்குடித்தனங்களில் வாழ்பவர்கள். மிகுந்த சகிப்புத்தன்மை கொண்டவர்கள்... ஆனால், மனதுக்குள்ளாகத் தங்கள் எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்திக்கொண்டு சமாதானம் அடைகிறவர்கள். இவர்கள் உலகத்தில் ரகசியம் என்று எதுவும் கிடையாது. குளிப்பது முதல் புணர்வது வரை யாவும் யாவரும் அறிந்த நிகழ்ச்சிகளே. எருமைமாட்டிலிருந்து கவர்ச்சி நடிகை வரை எல்லாவற்றைப் பற்றியும் இவரது கதை உலகம் ஆதங்கத்துடன் பேசித் தீர்க்கின்றன.

கோபி கிருஷ்ணனின் புயல் என்ற சிறுகதை, மாநகரில் புயல் மழையன்று ஒரு குடும்பத்தின் காட்சியை விவரிக்கிறது. வேலையிலிருந்து கிழிந்துபோன மழைக்கோட்டுடன் வீடு திரும்பும் பொறுப்பான ஒரு குடும்பத் தலைவன், வழியில் குழந்தையின் நினைவு வரவே அதன் காய்ச்சலுக்கு ஒரு மாத்திரையும் சாக்லெட் ஒன்றும் வாங்கிக்கொண்டு வீடு திரும்புகிறான். வீட்டில் குழந்தை சாக்லெட்டைக் கண்டதும், ‘என்னப்பா இன்னிக்கு ஸ்வீட் வாங்கிட்டு வந்திருக்கே. எனக்குப் பிறந்த நாளா?’ என்று கேட்கிறது. தனது அக்கறை இன்மையை நினைத்து அவனுக்கு குற்றவுணர்ச்சி ஏற்படுகிறது. புதிதாக வேலைக்குப் போகத் துவங்கி இருந்த மனைவி புலம்புகிறாள்.

தான் வேலை செய்யும் மருத்துவ மனையில் ஆபாசப்படங்களை வைத்துக் கொண்டு ஓர் ஊழியர் செவிலியரோடு கேலி பேசுவதையும், அங்குள்ள கிழட்டு மருத்துவர் ஒரு செவிலியைச் சேர்த்து வைத்துக்கொண்டு சல்லாபம் செய்வதையும் பற்றி சொல்கிறாள். வேலைதான் இப்படியிருக்கிறது என்றால், வேலை விட்டு வரும் வழியில், மழையில் காரை ஓரமாக நிறுத்திவிட்டு ஒருவன் ஆபாசமாக ஜாடைகாட்டி அவளை அழைக்கிறான். பயத்துடன் மகளின் பள்ளிக்கு அவசரமாகப் போய் அவளைக் கூட்டிக்கொண்டு வீட்டுக்குத் திரும்புகிறாள்.

வீட்டிலோ சில மாதங்களுக்கு முன்பு அதே வீட்டில் குடியிருந்த ஒருவன் நன்றாகக் குடித்த நிலையில் உள்ளே நுழைந்து, சேரில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்தபடி ‘இளமை சுகம்’ படத்துக்கு டிக்கெட் இருக்கிறது போகலாமா என்று கேட் கிறான். அவள் பயத்தில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அடுத்த வீட்டுக்குப் போய் ஒளிந்துகொள்கிறாள்.

இப்படி ஒரு நாள் வாழ்க்கையின் கசடுகளைக் கொட்டுகிறாள். பொறுமையாகக் கேட்டுக்கொண்டு இருந்த கணவனுக்கு என்ன சமாதானம் சொல்வது என்று தெரியவில்லை. இதுவரை யாருக்கும் எந்த இடையூறும் செய்திராத தனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று தன்னைத்தானே சலித்துக்கொண்டபடி ‘சாக்கடையில் உழலும் பன்றிகள்!’ என்று அவர்களைத் திட்டுகிறான். இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் அவனால் என்பதோடு கதை முடிகிறது.

நெருக்கடிகளுக்குப் பழகிக்கொள் வதைத் தவிர, அதை எதிர்கொள்வதற்கு வேறு எந்த உபாயமும் இல்லை என்பதை கோபி கிருஷ்ணனின் கதைகள் வெளிப்படுத்துகின்றன. பரிகாசமும் வலியும் கலந்த இந்தக் கதையை வாசித்து முடிக்கும்போது, நூற்றாண்டுகளாக அறிவுறுத்தப்பட்டு வரும் நீதி நூல்களும் தர்ம விசாரங்களும் வாழ்க்கையின் மீது எந்த எதிர்வினையும் ஏற்படுத்தவில்லை என்பதையே உணர முடிகிறது. உடைந்த கண்ணாடியைப் போல வாழ்வு முகம் காணும் யாவரையும் சிதறடித்துதான் காட்டுகிறது. வாழ்வின் கரங்கள் எப்போது உயர்வைத் தருகிறது, எப்போது கீழ்மையை உருவாக்குகிறது என்பதை எவரும் சொல்ல முடியாது. யாராலும் வெல்ல முடியாத வில்லாளியான அர்ச்சுனனும் கூட சில காலம் அரவாணியாகத்தான் வாழ்ந்திருக்கிறான். இப்படித்தானிருக் கிறது வாழ்வின் ருசி!

நவீன தமிழ்ச் சிறுகதையுலகில் தனித்துவமான எழுத்தாளராக மதிக்கப்படும் கோபி கிருஷ்ணன் மதுரையில் பிறந்தவர். உளவியல் & சமூக சேவை இரண்டிலும் முதுகலைப்பட்டம் பெற்றவர். Ôஆத்மன் ஆலோசனை மையம்Õ என்ற அமைப்பை உருவாக்கி, மனநல ஆலோசகராக சில காலம் பணியாற்றியுள்ளார். பல்வேறு தொண்டு நிறுவனங்களிலும் சமூக சேவகராகப் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு. நடுத்தர வர்க்கத்தின் போலியான மதிப்பீடுகளையும் அவலங்களையும் தனது கதைகளில் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டு வந்தவர். மனநிலை பிறழ்வு மையங்களில் ஆலோசகராக இருந்த நாட்களில் தான் சந்தித்த மனிதர்கள் பற்றி ‘உள்ளிருந்து சில குரல்கள்’ என்ற நாவலை எழுதியிருக்கிறார். ஒவ்வாத உணர்வுகள், தூயோன், மானிட வாழ்வு தரும் ஆனந்தம், டேபிள் டென்னிஸ் போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த புத்தகங்கள். வறுமையான குடும்பச் சூழல் காரணமாகவும், தனது சுய அடையாளத்தை இழந்துவிடக் கூடாது என்ற விடாப்பிடியான முயற்சியாலும் ஆழ்ந்த மனச்சோர்வுக்கு உட்பட்டவராக இருந்தார் கோபி கிருஷ்ணன். இதற்காக உள நல மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததால் உருவான பலஹீனம் காரணமாக, அதிக நோய்மையுற்று அதிலிருந்து மீள முடியாமலே 2003&ம் ஆண்டு காலமானார்.


===========

அருண்மொழிவர்மன் “இடாகினி பேய்களும்”...:ஒரு அறிமுகம் ::

எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் பற்றி சுஜாதா ஒரு முறை குறிப்பிட்டிருந்ததில் இருந்து நெடுநாட்களாக அவரது புத்தகங்களை தேட தொடங்கியிருந்தேன். எனக்கு அமைந்த ஒரு குறை, எனது நண்பர்கள் வட்டத்தில் இலக்கிய ஆர்வம் கொண்டவர்கள் மிக குறைவாக இருப்பது. அதுவும் கனடாவில் இல்லை என்றே சொல்லி விடலாம். அதனால் நான் தேடும் புத்தகங்களோ, திரைப்படங்களோ நேரடியாக எனக்கு கிடைத்தாலே அன்றி, மற்றவர்கள் ஊடாக எனக்கு கிடைப்பது குறைவு. ஒரு கண்காட்சி ஒன்றில் காலம் சிற்றிதழின் ஆசிரியர் செல்வம் அருளானந்தத்தின் அறிமுகம் கிடைத்தது, பின்னர் அவர் ஊடாக, அவர் நடத்தும் புத்தக கண்காட்சிகளில் அவர் சிபாரிசு செய்து சில நல்ல புத்தகங்களை வாசித்துள்ளேன். அண்மையில் அப்படியான ஒரு கண்காட்சியில் கோபிகிருஷ்ணன் எழுதிய “இடாகினி பேய்களும்” என்கிற நாவலை அவர் அறிமுகம் செய்ய, பல நாட்களாக வாசிக்க ஆசைப்பட்ட கோபிகிருஷ்ணனின் நடை தரும் அனுபவத்தை முதன் முதலாக அனுபவித்தேன். நகர்ப்புற வாழ்வில் மனிதர்களுக்கு ஏற்படும் வாழ்வு மீதான ஆழமான சலிப்பும், மன உளைச்சலும் பற்றி வீர்யமாக, அதே நேரம் காதோரமாய் ஒரு தோழன் கதை சொல்வதுபோல சொல்லும் நடை இவருக்கு கைவந்திருக்கின்றது.

எனது புரிதலில், நாவல் self fiction வடிவில் கொண்டு செல்லப்படுகின்றது. அதாவது, சேவை மையம் ஒன்றில் அவர் பணியாற்றிய போது அவர் பெற்ற அனுபவங்களை அவர் வாசகரிடம் சொல்வதாக கதை போகின்றது. அந்த மூலக்கதையில் வரும் சில சம்பவங்களை மையம் கொண்ட 9 சிறுகதைகளும் ஒரு கவிதையும் பிண்ணினைப்பாக தொடர்கின்றது. அதாவது, மூலக்கதையைவிட, கிளைக்கதைகள் அளவில் பெரியனவாக உள்ளது. சாருவின் ராஸலீலாவில் சில அத்தியாயங்கள் இப்படி அமைந்தது. தொடர்ச்சியான மன உளைச்சல்களாலும், வறுமையாலும் பாதிக்கப்பட்டே அவர் இறந்தார் என்று அறிந்திருக்கிறேன். கதையில், சமூகத்தின் போலியான மனிதர்கள் மீதான அவரது வெறுப்பு தெளிவாக காட்டப்படுகிறது. அவரது அலுவலகத்தில் உயர் நிலை அதிகாரிகள் மட்டும் பாவிக்க என்று ஒரு கழிவறையும், சாதாரண ஊழியர்கள் பாவிக்க இன்னொரு கழிவறையும் தட்டச்சு பணியாளார்கள் பாவிக்க இன்னொரு கழிவறையும் பேணாப்படுகிறது. உயர் அதிகாரிகள் ஒவ்வொருமுறை கழிவறை போய்வந்த பின்னரும் அதற்கென இருக்கும் ஒரு தொழிலாளியால் கழிவறை சுத்திகரிக்கப்படும் வழமை கொண்டுவரப்படுகிறது. இதைப்பற்றி சுத்திகரிப்பு தொழிலாளி கோபியிடம் “என்ன சார் மேடம்கள் மூத்திரம் பெய்றது இல்லைபோல, பன்னீர்தான் பெய்றாங்களா?” என்று கேட்கிறான். அதுபோல வாகனத் தரிப்பிடத்திலும் சில வரைமுறைகள் கொண்டுவரப்படுகின்றன. அதன்படி, சாதாரண நிலை ஊழியர்கள் தம் டூ வீலர்களை தாழ்வான இடத்தில்தான் நிறுத்தவேண்டும் என்று சொல்லப்படுகின்றது. இதனால் இரண்டு படிகளில் டூவீலர்களை ஒவ்வொரு நாளும் ஏற்றி இறக்கவேண்டிய கட்டாயம் வருகின்றது. இதில் உள்ள சிரமங்களை விளக்கி, அந்த படிகளை மறைத்து நீண்ட சாய்வான மரமொன்றை வைக்குமாறு தொழிலாளர் சார்பாக கோபி வைக்கும் வேண்டுகோள் மிக மோசமாக நிராகரிக்கப்படுகின்றது. உன்னிடம் அனுமதி பெறவேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை என்று தலைமை அதிகாரி கூறுகிறார். இப்படியான சம்பவங்களால், ஆறு மாதங்களின் பின்னர் வேலையை விட்டு விலகுகிறார்.
அதுபோல நாவலில் எனக்கு பிடித்த இன்னொரு பகுதி, சமாதானம் என்ற பெண் ஊழியருடன் கோபிக்கு ஏற்பட்ட உறவு பற்றிய பகுதி. ஏற்கனவே கோபிக்கு திருமணமான நிலையில் அது ஒரு வரம்பு மீறிய உறவேயானாலும் மிகுந்த காதல் ரசத்துடன் அந்த உறவு கூறப்படுகின்றது. காதல் மனச மட்டும் தான் பார்க்கும் அது இதென்ற பிதற்றல்கள் இல்லாமல் காதலும் காமமும் கலந்து அந்த உறவை மறக்க முடியாத அளவுக்கு மனதில் பதிக்க வைத்துள்ளார். ஒரு முறை காரில் கேளாம்பாக்கம் நோக்கி தொலைதூர பயணம் செல்கையில் சமாதானத்தின் உடல் மீதான ஸ்பரிசிப்பில் இருவரும் காமவசப்படுகிறார்கள். “it’s very soothing” என்கிறாள் சமாதானம், அப்போது “நான் வரம்புகள் அற்றவன், ஆனால் நீங்களாக என்னை நாடும்போது உங்களை நான் பரத்தையாக உணரவைக்க மாட்டேன்” என்கிறார் கோபி. சுதந்திரம் என்பது மற்றவரின் இருப்பையும் அங்கீகரித்தல் என்ற தொனிவரும் இடம் இது.

சமூகப்பணிகளுக்கென வரும் பணம் தேவையில்லாமல் விரயம் செய்யப்படுகின்றது. வெளிநாடொன்றில் இருந்து ஒருவர் செய்யும் நன்கொடை பற்றிய விபரங்களை பார்க்க மூவர் பணியாற்றுகிறார்கள். இப்படியான நிகழ்வுகள் கதை ஓட்டத்தில் சொல்லப்படுகின்றன. இவற்றின் மீதான அவரது வெறுப்பும் அது சார்ந்து அவருக்கு அதிகாரிகள் மீதெழும் கோபமும் பல இடங்களில் தெளிவாக தெரிகின்றது. (கனடாவில் சேகரிக்கப்படும் charitable trust நிதிகள் எவ்வாறெல்லாம் வீண் விரயம் செய்யப்படுகின்றது என்று சில ஆண்டுகளின் முன்னர் தொடர்ச்சியாக சில நாட்கள் புள்ளிவிபரங்களுடன் Toronto star பத்திரிகை நிறுவியது ஞாபகம் வருகின்றது) அவருக்கு மேலதிகாரியாக பணியாற்றிய ஒரு பெண் response என்பதை responce என்று எழுதுகிறாள். இப்படியான தவறுகளை சுட்டிக்காட்டும்போது இன்னொரு அதிகாரியால் “Gopikrishnan is not an authority in English” என்று திட்டப்படுகிறார். ஆற்றலும், அறிவும், சரியான உழைப்பும் இருந்தும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வலி சுட்டிக்காட்டப்படுகின்றது. இது அப்பட்டமாக அவரது சொந்த வாழ்வின் நிலையே தான். அவர் இறந்தபோது இறுதி சடங்குகள் செய்யக்கூட காசு இருக்கவில்லை என்று வாசித்திருக்கிறேன். இது பற்றி எஸ். ராமகிருஷ்ணன் ஒரு அருமையான கட்டுரை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் நூற்றுக்கணக்கான நாவல்களை எழுதியவர்களைவிட பெருமளவு பாதிப்பை தமிழ் இலக்கிய உலகில் ஏற்படுத்தின. எந்த இலக்கிய அரசியலிலும் ஈடுபடாது தன் எழுத்து நடை போல அமைதியாக வாழ்ந்து மறைந்த எழுத்தாளர் இவர். இவரது பிற படைப்புகளையும் வாசிக்க மிகுந்த ஆவலாக உள்ளேன்.

வலைப்பூக்களில் இவர் பற்றிய இரண்டு பதிவுகள்
லேகாவின் பதிவு
எஸ். ராமகிருஷ்ணனின் உயிர்மை பதிவு
எஸ். ராமகிருஷ்ணனின் கதாவிலாசம்

=====================

யாழிசை கோபி கிருஷ்ணனின் 'உள்ளே இருந்து சில குரல்கள்' ::

எழுத்தாளர் கோபி கிருஷ்ணனின் மரணத்திற்கு பிறகு குமுதம் இதழ் ஒரு பக்க அளவில் அஞ்சலி கட்டுரை வெளியிட்டு இருந்தது,அதற்கு முன்பு வரை கோபியை பற்றிய எந்த அறிமுகமும் இருந்ததில்லை.வாழ்ந்த காலத்தில் பெரிதும் அறிய படாத எழுத்தாளர்கள் வரிசையில் பா.சிங்காரத்தை போல கோபியும் உண்டு.

நண்பர்கள் மூலமாகவும்,வலைத்தளங்களிலும் இவரின் "உள்ளே இருந்து சில குரல்கள்" நாவல் குறித்த விமர்சனங்கள் இந்நாவலை படிக்கும் ஆவலை தூண்டியது.நாவலை படித்து கொண்டிருந்த கணங்களில் அதன் தாக்கத்தை எதிர்கொள்ள வழியின்று பல சமயம் பாதியில் புத்தகத்தை மூடி வைத்தேன்..கனத்த வலி தரும் மனித நிலைகளின்(பிறழ்வு) தொகுப்பு வெகுவான ஏற்ற இறக்கம் இன்றி சீராக பயணிக்கின்றது.

மன நல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்க பட்டிருக்கும் மனநிலை பாதிக்கபட்டோர் அல்லது அவர்களின் உறவினரின் நேரடி கூற்றாக ஒவ்வொரு நிலையும் விவரிக்கப்பட்டுள்ளது.ஐம்பதிற்கும் மேலான மனநிலை வெளிப்பாடுகளில் பெரும்பாலான பிறழ்வுகளுக்கு காரணமாய் அமைவது அதீத கடவுள் பக்தி,திருமண/காதல் தோல்வி,உறவுகள்,வேலை,அர்த்தம் அற்ற பயம்,சந்தேகம் என பொதுவாய் கொள்ளலாம்.இவ்வாறு சிறு சிறு அதிர்வுகளை உள்வாங்கி ஒவ்வொரு நிலையும் கடக்க வேண்டியுள்ளது.மன பிறழ்வை நோய் என கூறுவதை காட்டிலும் ஒரு வகை பாதிப்பு என சொல்வது சரியாக இருக்கும்,சில நிலைகளை படிக்கும் பொழுது நமக்கும் அவர்களுக்குமான வித்யாசம் பெரிதாய் இல்லை.சிந்தனையையும்,மனவோட்டத்தையும் கட்டுக்குள் கொண்டு வரும் வரையில் நமது நிலை குழப்பம் இன்றி தொடர்கின்றது.

இது தவிர்த்து நாவலின் இறுதியில் மன நல பாதிப்பிற்க்கு வைத்தியம் (?!) செய்யும் சில சாமியார்கள், மற்றும் மாந்த்ரீகர்களின் சந்திப்புகள்,மன நலம் குறித்து விவாதிக்கும் பல நூல்களின் மேற்கோள்கள் என இறுதி பகுதி முழுவதும் மன பிறழ்வு குறித்து முழுதுமாய் உணர்ந்து கொள்ள உதவுகின்றது.

மனித மனங்களின் வலிகளை,இருண்ட வாழ்வின் அவலங்களை மிக அழுத்தமாக பதிவு செய்கின்றது இந்நாவல். கோபி குறித்த எஸ்.ராவின் சமீபத்திய கட்டுரை இந்த எழுத்தாளனுக்கு சிறந்ததோர் அஞ்சலி.

வெளியீட்டார் - வம்சி புக்ஸ்
விலை - 80 ரூபாய்

=====================


š இப்பதிவை மின்னஞ்சலிட